பள்ளி சிறார்களுக்கு ராகி மால்ட் பிப்., முதல் வழங்க ஏற்பாடு
பள்ளி சிறார்களுக்கு ராகி மால்ட் பிப்., முதல் வழங்க ஏற்பாடு
ADDED : ஜன 08, 2024 11:41 PM
குடகு: “அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, வரும் பிப்ரவரி மாதம் முதல் ராகி மால்ட் வழங்க ஆலோசிக்கப்படுகிறது,” என, தொடக்க, உயர்நிலைப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
குடகு, மடிகேரியில், நேற்று அவர் கூறியதாவது:
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி சிறார்களுக்கு, ஏற்கனவே வாரம் இரண்டு நாட்கள் முட்டை வழங்கப்படுகின்றன. வரும் மாதம் முதல், ராகி மால்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் பல பிரச்னைகள் உள்ளன. இந்த பிரச்னைகள் படிப்படியாக சரி செய்யப்படும். 13,000 ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கவுன்சலிங் மூலம் 37,000 ஆசிரியர்கள் இடம் மாற்றப்படுவர்.
அரசு பள்ளிகளை பலப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமனம், மதிய உணவு, முட்டை, பால் வழங்குவது என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. சிறார்களின் பாட புத்தக சுமையை குறைக்க, நடவடிக்கை எடுத்துள்ளது.
குடகு மாவட்டத்தில், 100 ஆண்டுகள் நிறைவு செய்த பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளை கர்நாடக பப்ளிக் பள்ளிகளை போன்று மேம்படுத்த, அரசு திட்டமிட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்கள் தரையில் அமரக்கூடாது. டெஸ்க், பெஞ்சு உட்பட, மற்ற பொருட்கள் வாங்கப்படும்.
புதிய தாலுகாக்களுக்கு, கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படுவர். பொன்னம்பேட் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில், அடிப்படை வசதிகள் செய்யப்படும். இதற்கான திட்டம் வகுத்துள்ளோம். மாவட்ட ஹாக்கி விளையாட்டு வீரர்கள், தேச, சர்வதேச அளவில் வளர வேண்டும்.
விராஜ்பேட் சட்டசபை தொகுதியில், 10 விளையாட்டு மைதானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. உள்ளூர் விளையாட்டு வீரர்கள் பயன் பெறுவர். குடகு மாவட்டத்தில், விளையாட்டுக்கு கூடுதல் ஊக்கம் அளிக்கப்படுகிறது. தேசிய, சர்வ தேச ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு அதிக நிதியுதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.