ரூ.23 லட்சம் பி.எப்., மோசடி உத்தப்பாவுக்கு கைது வாரன்ட்
ரூ.23 லட்சம் பி.எப்., மோசடி உத்தப்பாவுக்கு கைது வாரன்ட்
ADDED : டிச 22, 2024 04:49 AM

புலிகேசிநகர்: ஊழியர்களுக்கு 23.36 லட்சம் ரூபாய் பி.எப்., பணத்தை செலுத்தாமல் மோசடி செய்ததாக, இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, 38. கர்நாடக மாநிலம் குடகை சேர்ந்தவர்.
பெங்களூரு புலிகேசி நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தன் குடும்பத்தினருடன் வசித்தார்.
பெங்களூரில் செயல்பட்டு வரும் 'செஞ்சுரிஸ் லைப் ஸ்டைல் பிராண்ட்' என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.
இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு செலுத்த வேண்டிய பி.எப்., பணம் 23.36 லட்சம் ரூபாயை செலுத்தாமல், ராபின் உத்தப்பா மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம், பி.எப்., நிதி மற்றும் மீட்பு அதிகாரி சடாக் ஷரி கோபால் ரெட்டி கவனத்திற்கு சென்றது.
இதையடுத்து, கடந்த 4ம் தேதி ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
மேலும் போலீஸ் நிலையத்திலும் சடாக் ஷரி கோபால் ரெட்டி புகார் செய்தார்.