அண்ணி மீது ஆசை வைத்தவரை தட்டி கேட்டவரை கொன்றவர் கைது
அண்ணி மீது ஆசை வைத்தவரை தட்டி கேட்டவரை கொன்றவர் கைது
ADDED : அக் 29, 2024 07:58 AM
கோலார்: 'அண்ணிக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாம்' என, அறிவுரை கூறியவரை கொன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்.
கோலார் நகரின், சுல்தான் திப்பசந்திராவில் வசித்தவர் ரோஹித், 22. இவரது நண்பர் அம்ஜத், 24. இவர்கள் துாரத்து உறவினர்களாவர். அம்ஜத் அவ்வப்போது நண்பர் ரோஹித் வீட்டுக்கு வருவார். இவரது அண்ணி மீது அம்ஜத் கண் வைத்தார்.
ரோஹித்துக்கு தெரியாமல், அவரது அண்ணியின் மொபைல் போன் எண்ணை பெற்று, தினமும் போன் செய்து ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்தார். அவ்வப்போது வீடியோ காலும் செய்துள்ளார்.
இதை அண்ணி, தன் மைத்துனர் ரோஹித்திடம் கூறி, அம்ஜத்தை கண்டிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்பின் ரோஹித் தன் உறவினர்களுடன், அம்ஜத் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். தன் அண்ணிக்கு தொந்தரவு கொடுத்தால், சும்மா விடமாட்டேன் என, எச்சரித்தார்.
ஆனாலும், அம்ஜத் திருந்தவில்லை. மீண்டும் போன் செய்ய ஆரம்பித்தார். மூன்று நாட்களுக்கு முன், ரோஹித் முன்னிலையிலேயே, அவரது அண்ணிக்கு வீடியோ கால் செய்தார். இதனால், மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது.
இந்நிலையில் பணி நிமித்தமாக பெங்களூருக்கு சென்ற ரோஹித், நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்கு திரும்பினார். இவரிடம் பேச வேண்டும் என கூறி, புறநகர் பகுதியின் ஜமால் நகர் அருகே, அம்ஜத் வரவழைத்தார். ரோஹித்துடன் வாக்குவாதம் செய்து, கத்தியால் அவரது மார்பில் குத்திவிட்டு தப்பியோடினார்.
நேற்று காலை ரோஹித் கொலையாகி கிடப்பதை கண்ட சிலர், கோலார் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், உடலை மீட்டனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, கொலையாளி அம்ஜத்தை கைது செய்தனர்.