செயற்கை கை, கால்கள் இலவசம்: கும்பமேளாவில் புனித சேவை
செயற்கை கை, கால்கள் இலவசம்: கும்பமேளாவில் புனித சேவை
ADDED : ஜன 24, 2025 02:32 AM

பிரயாக்ராஜ் :பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில், உடல் ஊனமுற்றோருக்கு செயற்கை கை, கால்கள் வழங்கும் அரிய சேவையை, ராஜஸ்தானைச் சேர்ந்த அறக்கட்டளை செய்து வருகிறது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக கோடிக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி செயற்கை கை, கால்களை இலவசமாக பெறுவதற்காகவும் சிலர் இங்கு வருகின்றனர்.
அன்னதானம்
இந்த அரிய சேவையை, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த நாராயண சேவா சன்ஸ்தான் என்ற அறக்கட்டளை செய்து வருகிறது. மஹா கும்ப நகரில், இந்த அறக்கட்டளையின் கூடாரத்தில் தற்காலிக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
கை, கால்களை இழந்தவர்கள் தங்களுக்கு செயற்கை உறுப்புகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இங்கு வரிசையில் காத்திருக்கின்றனர். டாக்டர்கள், பிசியோதெரபிஸ்ட், செயற்கை உறுப்புகள் தயார் செய்வோர் என, 50 பேர் குழு இந்த முகாமை நடத்தி வருகிறது.
இதுகுறித்து அறக்கட்டளையின் நிர்வாகி கிருனால் சவுத்ரி கூறி உள்ளதாவது:
சாதாரணமாக ஒரு ஜோடி செயற்கை கால்கள், 90,000 ரூபாய் விலை கொண்டவை. பல அமைப்புகள் சலுகை கட்டணத்தில் வழங்குகின்றன. ஆனால், நாங்கள் முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்.
கும்பமேளாவில் இந்த முகாம் அமைப்பதன் வாயிலாக, மதம் மற்றும் ஆன்மிகமும் அதில் சேர்கிறது. மதம் மற்றும் ஆன்மிக சேவைக்காகவே, கும்பமேளாவில் பலர் அன்னதானம் வழங்குவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், இந்த சேவையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை உறுப்புகளை பொருத்துவதற்கு முதலில் அளவு எடுக்க வேண்டும்.
பயிற்சி
அதன்பின் அது தயாரிக்கப்பட்டு பொருத்தப்படும். அதை உடல் ஏற்றுக் கொள்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அவற்றை எப்படி பயன்படுத்துவது, பராமரிப்பது என்பதற்கான பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த முகாமில், செயற்கை கால்கள் பொருத்துவதற்காக இதுவரை, 50 பேருக்கு அளவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

