பா.ஜ., அரசுக்கு எதிராக ஏழைகள் திரள வேண்டும் குடிசைவாசிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு
பா.ஜ., அரசுக்கு எதிராக ஏழைகள் திரள வேண்டும் குடிசைவாசிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு
ADDED : ஜூன் 29, 2025 10:01 PM

புதுடில்லி:''குடிசைகளை இடித்துத் தள்ளும் பா.ஜ., அரசுக்கு எதிராக வீடுகளை இழந்த ஏழைகள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்,'' என, முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
தலைநகர் டில்லியில் குடிசைகள் இடிக்கப்பட்டு வருகின்றன. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, ஆம் ஆத்மி சார்பில், ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
குடிசைகளை இடித்துத் தள்ளும் பா.ஜ., அரசுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். வரும் தேர்தல்களில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையுமே மக்கள் நிராகரிக்க வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, 'ஜஹான் ஜுக்கி, வஹான் மகன்' என்றார். ஆனால், 'ஜஹான் ஜுக்கி, வஹான் மைதான்' என்பதைத் தான் அவர் மாற்றிச் சொல்லி மக்களை ஏமாற்றி இருக்கிறார்.
மோடியின் அனைத்து வாக்குறுதிகளுமே பொய். எதிர்காலத்தில் மீண்டும் மக்கள் ஏமாற வேண்டாம்.
ஆம் ஆத்மியின், 10 ஆண்டுகால ஆட்சியில் சிறந்த டில்லியை உருவாக்கி விட்டுச் சென்றிருந்தோம். ஆனால், பா.ஜ., அரசு அதை நாசமாக்கி வருகிறது.
மின்வெட்டு தினமும் நடக்கிறது. பள்ளிகளில் கல்விக் கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பா.ஜ., அரசின் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் டில்லியைக் கொள்ளையடிப்பதில் மும்முரமாக உள்ளனர்.
வீடுகளை இழந்து தெருவில் நிற்கும் குடிசைவாசிகள் அரசுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும். டில்லி மாநகரில் உள்ள, 40 லட்சம் குடிசைவாசிகள் சாலைகளில் இறங்கிப் போராடினால் தான், அரசு தன் இடிப்பு நடவடிக்கையை நிறுத்தும்.
இதே ஜந்தர் மந்தரில் இருந்து தான் அண்ணா ஹசாரே இயக்கம் துவங்கியது. காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டது. அதே இடத்தில் இருந்து, ஒரு புதிய இயக்கம் துவக்கி, பா.ஜ.,வின் அதிகாரத்தை அசைப்போம்.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகிய இரு கட்சிகளும், சகோதர - சகோதரி போன்று இணைந்து விட்டது. மக்களைப் பற்றி அந்தக் கட்சிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை.
டில்லியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு இருந்தது. பள்ளிக் கட்டணம் இஷ்டத்துக்கு உயர்த்தப்பட்டன. ஆனால், ஆம் ஆத்மியின் 10 ஆண்டு ஆட்சியில் 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சப்ளை இருந்தது.
தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்கவில்லை. பா.ஜ. ஆட்சியில் மீண்டும் அவையெல்லாம் நடக்கின்றன.
ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கும் பா.ஜ., அரசு, மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மற்றும் சவுரவ் பரத்வாஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்குப் பதிவு விளையாட்டை நிறுத்திவிட்டு மக்களுக்காக பா.ஜ., பாடுபட வேண்டும்.
டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதே, தவறுதலாக கூட பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என அறிவுறுத்தி 'வீடியோ' ஒன்றையும் வெளியிட்டேன். அவர்களின் கண்கள் உங்கள் குடிசைகள் மீது உள்ளன என்பதை சுட்டிக் காட்டி இருந்தேன்.
பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட்டால், ஓராண்டுக்குள் டில்லியில் அனைத்து குடிசைகளையும் அப்புறப்படுத்தி விடுவர் என்று ஆதாரத்தோடு கூறினேன்.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற, ஐந்து மாதத்திலேயே குடிசைகளை இடித்து, ஏழைக் குடும்பங்களை தெருவுக்கு அனுப்பி விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.