பழங்குடியினர் வசிக்கும் நகரில் அசாம் சட்டசபை கூட்டம்
பழங்குடியினர் வசிக்கும் நகரில் அசாம் சட்டசபை கூட்டம்
ADDED : பிப் 18, 2025 12:41 AM

கோக்ரஜார்: அசாம் மாநில சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக, குவஹாத்திக்கு வெளியே, மாநில சட்டசபை கூட்டம், கோக்ரஜார் நகரில் நேற்று நடந்தது.
அசாம் மாநில சட்டசபை, குவஹாத்தியில் தான் உள்ளது. அந்த மாநிலத்தின் போடோலாந்து பழங்குடியின மக்களுடன், மாநில அரசு மேற்கொண்ட ஒப்பந்தப்படி, அவ்வப்போது, மாநில சட்டசபை கூட்டம், குவஹாத்தி தவிர்த்து, போடோலாந்தின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, போடோ பழங்குடியின மக்கள் நிறைந்த கோக்ரஜார் நகரில் நேற்று நடந்த, சிறப்பு சட்டசபை கூட்டத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சபாநாயகர் பிஸ்வஜித் டாய்மாரி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த வரலாற்றுப்பூர்வ நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சபாநாயகர் டாய்மாரி கூறும் போது, ''மாநில சட்டசபை கூட்டத்தை தலைநகரில் நடத்தாமல், பழங்குடியின மக்களின் முக்கிய நகரம் ஒன்றில் நடத்தியதன் வாயிலாக, பார்லிமென்ட் ஜனநாயகத்தை மக்களுக்கு நெருக்கமாக ஆக்கியுள்ளோம்,'' என்றார்.
பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள் கூட்டம் மற்றும் கவர்னர் உரை மட்டும் தான் கோக்ரஜார் நகரில் நடந்தது. பிற கூட்டங்கள் வழக்கம் போல, குவஹாத்தி நகரில், மார்ச் 25 வரை நடக்கும்.

