ADDED : ஜூன் 09, 2025 12:46 AM

குவஹாத்தி: அசாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்தாலும், 12 மாவட்டங்களில் 3.37 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதையொட்டி, அங்குள்ள பிரம்மபுத்திரா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக அதன் துணை நதிகளான துப்ரி, கோப்லி உள்ளிட்டவற்றிலும் நீர்வரத்து அதிகரித்து செல்வதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும், நதிக்கரையோரங்களில் உள்ள 12 மாவட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு வசிக்கும் 3.37 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதேபோல் தாழ்வான பகுதிகளில் வசித்த 36,000க்கும் மேற்பட்டோரை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.
இதுதவிர, 31,278 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காஜிரங்கா தேசிய பூங்கா, போபிடோரா வன உயிர் சரணாலயம் உள்ளிட்டவை எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.
28 பேர் மீட்பு
மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் பெய்த கனமழையால், சாத்தேன் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், அங்கு சுற்றுலா பயணியர் சிக்கி தவிப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை மீட்க ஹெலிகாப்டரை, சிக்கிம் அரசு உடனே அனுப்பியது. இதன்படி, அங்கு சிக்கித்தவித்த மூன்று குழந்தைகள் உட்பட 28 பேரை ஹெலிகாப்டர் வாயிலாக பத்திரமாக மீட்டு, அருகில் உள்ள பாஹ்யாங் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர்.

