பீஹாரில் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில்... இழுபறி!: கூட்டணி கட்சிகளால் பா.ஜ., - காங்., திணறல்
பீஹாரில் சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில்... இழுபறி!: கூட்டணி கட்சிகளால் பா.ஜ., - காங்., திணறல்
ADDED : செப் 22, 2025 01:15 AM

பீஹாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டு அடம் பிடிப்பதால், பா.ஜ.,வும், காங்கிரசும் திணறி வருகின்றன. தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில், இரண்டு கூட்டணிகளிலும் இழுபறி நீடிக்கிறது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு, தேசிய அளவில் முக்கிய கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கும், மாநில அளவில் செயல்படும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளுக்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி - ராம்விலாஸ் பஸ்வான், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவை இடம்பிடித்து உள்ளன.
பேச்சு
காங்கிரஸ் தலைமையிலான 'இண்டி' கூட்டணியில், பீஹாரில் எதிர்க்கட்சியாக உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் லெனின் கம்யூனிஸ்ட், இ.கம்யூ., ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிட முடியாமல் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் திணறி வருகின்றன.
தே.ஜ., கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் சமீபத்தில் பாட்னாவில் சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதில், இரு கட்சிகளும் தலா 100 இடங்களில் போட்டியிடவும், மீதமுள்ள இடங்களை கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், கூடுதலாக ஒரு இடத்தில் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பா.ஜ., - ஐக்கிய ஜனதா தள கூட்டணி 201 இடங்களிலும், கூட்டணியில் மீதமுள்ள கட்சிகள் 42 இடங்களிலும் போட்டியிட திட்டமிடப்பட்டு உள்ளது.
எதிர்பார்ப்பு
இருப்பினும், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளையும் கைப்பற்றிய சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி, சட்டசபை தேர்தலில் 40 தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளது.
மீதமுள்ள ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா போன்றவையும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து உரிய முடிவு எட்டப்படாத சூழல் நிலவுகிறது.
வரும் 27ல் பாட்னா வரும் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான பேச்சுக்கு பின், தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என நம்பப்படுகிறது.
பிடிவாதம்
அதேபோல், இண்டி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஒதுக்கப்பட்ட 70 தொகுதிகளை மீண்டும் கேட்டுப் பெற முடிவு செய்துள்ளது. அந்த தேர்தலில், 70ல், 19 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால், இந்த முறை அக்கட்சிக்கு 50 இடங்களை ஒதுக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில், 19 இடங்களில் போட்டியிட்டு, 12 தொகுதிகளை கைப்பற்றிய மார்க்சிஸ்ட் கம்யூ., லெனின் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை எதிர்த்து, காங்கிரஸ் எம்.பி., ராகுல் மேற்கொண்ட வாக்காளர் அதிகார யாத்திரை, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பும் அக்கட்சி, 70 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளை பெற்றே தீர வேண்டும் என பிடிவாதத்தில் உள்ளது.
இதனால், இண்டி கூட்டணியிலும் தொகுதிகளை பங்கிடுவதில் இழுபறி நீடிக்கிறது.
நமது சிறப்பு நிருபர் -