சட்டசபை நேரடி ஒளிபரப்பு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
சட்டசபை நேரடி ஒளிபரப்பு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
ADDED : மார் 11, 2024 04:38 PM

சென்னை: சட்டசபை நிகழ்வுகளை நேரலை ஒளிபரப்பு செய்வது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி, மறைந்த தே.மு.தி., கவின் தலைவர் விஜயகாந்த் மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி,‛‛ சட்டசபை நிகழ்வுகளை ஒளிபரப்புவதில், மற்ற மாநிலங்களில் என்ன மாதிரியான நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும்'' என விளக்கம் அளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ‛‛எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பேச்சுகள் ஒளிபரப்பாகவில்லை என்பதுதான் மனுதாரர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாவிட்டாலும் கூட, 5 நிமிட தாமதமாகக் கூட ஒளிபரப்பலாம். அந்த இடைவெளியில், அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய பகுதிகளை நீக்கிவிட்டு கூட ஒளிபரப்பலாம்'' என தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு மீதான விசாரணை வரும் ஏப்ரல் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

