சட்டசபை துணுக்குகள் **** முன்னரும், பின்னரும் தேசிய கீதம்
சட்டசபை துணுக்குகள் **** முன்னரும், பின்னரும் தேசிய கீதம்
ADDED : பிப் 13, 2024 07:04 AM

* விதான் சவுதா வளாகத்திற்கு கர்நாடக கவர்னர் கார் நுழைந்தவுடன், நான்கு குதிரைப் படை போலீசார் புடையசூழ அழைத்து வரப்பட்டனர். பிரமாண்ட படிக்கட்டுகள் அருகில், சபாநாயகர் காதர், சட்டமேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, முதல்வர் சித்தராமையா, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், சட்டசபை செயலர் விசாலாட்சி, சட்ட மேலவை செயலர் மஹாலட்சுமி ஆகியோர் கவர்னருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
* கவர்னர் வருவதாக தலைமை மார்ஷல் அறிவித்தவுடன், சட்டசபை வளாகத்திற்குள் நுழைந்த அவருக்கு, எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தனர்.
* அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் அசோக்கை பார்த்து, முதல்வர் சித்தராமையா வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு, 'சல்யூட்' அடித்து, அவர் வணக்கம் தெரிவித்தார்.
* சரியாக காலை 11:03 மணிக்கு வாசிக்க துவங்கிய கவர்னர், 31 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை 11:45 மணிக்கு, ஹிந்தி மொழியில் வாசித்து முடித்தார். ஒவ்வொரு வரி விடாமல் வாசிப்பதற்காக, இடது கை விரல் வரிசையாக வைத்தப்படி இருந்ததை காண முடிந்தது. உரை வாசிக்க ஒரு எல்.இ.டி., விளக்கு, இரண்டு மைக்குகள் பொருத்தப்பட்டன.
* கவர்னர் அருகில், சபாநாயகர் காதர், சட்ட மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டி அமர்ந்திருந்தனர். இரு அவைகளின் மார்ஷல்கள் நின்றிருந்தனர்.
* துணை சபாநாயகர் ருத்ரப்ப லமானி, அமைச்சர் நாகேந்திரா, பா.ஜ., உறுப்பினர்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, பசனகவுடா பாட்டீல் எத்னால், விஜயேந்திரா உட்பட பலர், கவர்னர் உரை துவங்கிய பின் சட்டசபைக்குள் வந்தனர்.
* ம.ஜ.த., குழுத் தலைவர் குமாரசாமி, சட்டசபைக்கு நேற்று வரவில்லை.
* கட்சித் தலைவர்கள் மீது அதிருப்தியில் உள்ள பா.ஜ., உறுப்பினர் சோமசேகர், துாரத்தில் அமர்ந்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் அசோக், அவரை அருகில் வரும்படி அழைத்தார். அவர் மறுக்கவே, மீண்டும் அங்கேயே சென்று அமர்ந்து கொள்ளுங்கள், வாருங்கள் என்றார். அதன் பின்னரே வந்து பேசிவிட்டுச் சென்றார்.
* சட்டசபைக்குள் நுழைந்த ஒவ்வொரு பா.ஜ ., உறுப்பினருக்கும், அக்கட்சி உறுப்பினர் முனிரத்னா காவி சால்வை அணிவித்தார்.
* ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, பா.ஜ., - எம்.எல்.சி., தேஜஸ்வினி கவுடா முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். அப்போது, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமாரை பார்த்து, சார், சார், ஜி.டி.தேவகவுடாவுக்கு காவி சால்வை அணிவித்து, பெரிய கவுடாவிடம் நோட்டீஸ் பெற்றுக் கொடுத்து விடலாமா என்று சிரித்தபடி பேசினார். அருகில் இருந்த மற்றவர்களும் சிரித்தனர்.
* கவர்னர் உரைக்கு முன்னரும், பின்னரும் போலீஸ் இசை குழுவினர் தேசிய கீதம் வாசித்தனர். அவர் வந்த போதும், புறப்பட்ட போதும், அவையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.