ADDED : ஜன 24, 2024 11:11 PM
போபால்:மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பாந்தவ்கர் பகுதியின் உதவி கலெக்டராக அமித் சிங் உள்ளார்.
இவர், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அவரது பகுதியில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பார்வையிட சென்றார்.
அவருடன், பாந்தவ்கர் தாசில்தார் மற்றும் உதவியாளர்கள் சென்றனர்.
உமரியா பகுதியில் இவர்களது வாகனம் சென்ற போது, இளைஞர் ஒருவர் தனது காரில் முந்திச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், காரில் வந்த இரு இளைஞர்களை உதவி கலெக்டரின் உதவியாளர்கள் உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கினர்.
இதில் ஒருவருக்கு தலை மற்றும் உடம்பில் காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களை தடுக்காமல் உதவி கலெக்டர் வேடிக்கை பார்த்த படி நின்றிருந்தார்.
இதை தொலைவில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதும், இந்த சம்பவம் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கவனத்திற்கு சென்றது.
'பொது மக்கள் மீதான இது போன்ற செயலை பொறுத்துக்கொள்ள முடியாது' என அறிக்கை வெளியிட்ட அவர், உதவி கலெக்டரை உடனடியாக சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும், உதவி கலெக்டர், தாசில்தார் ஆகியோர் மீது போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை உதவி கலெக்டர் அமித் சிங் மறுத்து உள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், 'முந்திச் சென்றதற்காக தாக்குதல் நடக்கவில்லை. இளைஞர்களது கார் வேகமாக மோதுவது போல் வந்தது.
'எனது ஓட்டுநர் சமாளித்து விபத்தை தடுத்தார். பின், ஆத்திரத்தில் ஓட்டுநரும், உதவியாளர்களும் இறங்கிச் சென்று இளைஞர்களை தாக்கினர். நான் அவர்களை தடுக்கவே காரில் இருந்து இறங்கினேன்' என கூறியுள்ளார்.