ஈ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல்: மேலும் இருவர் கைது
ஈ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல்: மேலும் இருவர் கைது
ADDED : ஜன 15, 2024 12:40 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில், மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இங்கு நடந்த ரேஷன் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி என்ற இடத்தில் உள்ள, ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஷாஜகான் ஷேக் வீட்டுக்கு, கடந்த 5ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர்.
அப்போது, அவர்கள் வந்த வாகனங்கள் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் காயமடைந்த மூன்று அதிகாரிகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலை, ஷாஜஹான் ஷேக் ஆதரவாளர்கள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவத்துக்கு பின், ஷாஜஹான் ஷேக் தலைமறைவானதை அடுத்து, அமலாக்கத்துறை சார்பில் அவருக்கு எதிராக, 'லுக் அவுட்' எனப்படும் தேடப்படும் நபர் என்பதற்கான நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நசாத் மற்றும் மினாகா ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை மொத்தம் நான்கு பேர், இவ்வழக்கில் கைதாகி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.