வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / ஹிந்துக்கள் மீது தாக்குதல் / ஹிந்துக்கள் மீது தாக்குதல்
/
செய்திகள்
ஹிந்துக்கள் மீது தாக்குதல்
4
ADDED : ஆக 06, 2024 01:28 AM
இருவர் பலிவங்கதேச கலவரத்தில், ஹிந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. நோக்காளி மாவட்டத்தில், தனுஸ்ரேயா பட்டா என்பவர் வீட்டுக்குள் நுழைய முயன்ற வன்முறை கும்பல், வீட்டின் நுழைவு வாயிலை உடைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த வீட்டில் வசிக்கும் பெண்கள், 'பகவான்... பகவான்...' என கூச்சலிட்டபடி கதறும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.ரங்க்புர் என்ற இடத்தில், ஹிந்து அவாமி லீக் கட்சி பிரமுகர் ஹரதன் ராய் மற்றும் அவரது உறவினர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர்.வங்கதேச உயர் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் இருப்பதாகவும், அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் மாணவர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது.
பாகிஸ்தான் - வங்கதேசம் இடையே 1971ல் நடந்த போருக்கு பின் வங்கதேசம் தனிநாடாக பிரிந்தது. இந்த சுதந்திர போரில் வங்கதேசத்துக்காக போரிட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணியில் வழங்கப்பட்டு வந்த 30 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் கடந்த மாதம் போராட்டத்தை துவங்கினர். இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் குறைத்தது. இதற்கிடையே, 'போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மாணவர்கள் அல்ல. அவர்கள் தேச துரோகிகள். அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்' என, ஷேக் ஹசீனா கூறியது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், காலவரையின்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கல்லுாரிகள், பல்கலைகள் மூடப்பட்டன. இணைதளம், தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டன. இது மாணவர்கள் மத்தியில் உஷ்ணத்தை அதிகரித்து போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியது.
வங்கதேசத்தில், 15,000 இந்தியர்கள் வசிப்பதாக நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது. அந்நாட்டின் பல்வேறு பல்கலைகளிலும் 4,000 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 778 மாணவர்கள் சாலை மார்க்கமாக இந்திய வந்தடைந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் விமானம் வாயிலாக நாடு திரும்பியதாக நம் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. மீதியுள்ள மாணவர்களையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறியதை தொடர்ந்து, ராணுவ தலைமை தளபதி வாகேர் உஸ் ஜமான் நாட்டின் நிர்வாகத்தை கைப்பற்றியுள்ளார். இவர்,வங்கதேச தேசிய பல்கலை மற்றும் லண்டன் பல்கலையின் கீழ் செயல்படும் கிங்ஸ் கல்லுாரியிலும் ராணுவம் தொடர்பான பட்டப்படிப்புகளை படித்தவர். கடந்த 40 ஆண்டுகளாக, வங்கதேச ராணுவத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். ஐ.நா., அமைதிக்குழுவிலும் இடம் பெற்றிருந்த இவர், வங்கதேச ராணுவ தளபதியாக கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றார்.
ஷேக் ஹசீனா பதவி விலகி, நாட்டில் இருந்து வெளியேறிய நிலையில், போராட்டக்காரர்கள் அவரது வீடு உள்ளிட்ட பல இடங்களுக்குள் புகுந்து, பொருட்களை கொள்ளையடித்தனர்.இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான நஹித் இஸ்லாம் கூறியுள்ளதாவது:நாட்டின் நலனை பாதுகாப்பதற்காகவே, நாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நாட்டின் சொத்துக்களை பாதுகாப்பது நம் கடமை. இந்த நேரத்தில், பொருட்களை கொள்ளையடிப்பது என்பது, நம் நோக்கங்களுக்கு எதிரானதாகும். அதனால், கொள்ளை அடிப்பது போன்றவற்றில், மாணவர்கள் ஈடுபடக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.