ADDED : டிச 13, 2024 05:17 AM
யாத்கிர்: யாத்கிரை சேர்ந்தவர் நிங்கப்பா, 25. இவரும் வேறு ஜாதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும், மூன்று ஆண்டுகளாக காதலித்தனர். இதற்கு இளம்பெண் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், நிங்கப்பா காதலை கைவிட்டார். ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், தற்கொலை செய்வேன் என்று காதலி மிரட்டினார்.
இதனால், ஆறு மாதங்களுக்கு முன்பு காதலியை, நிங்கப்பா திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பின், குஜராத்தில் வசித்தனர். கடந்த மாதம் சொந்த ஊருக்கு திரும்பினர். இளம்பெண்ணிடம் அவரது குடும்பத்தினர் நைசாக பேச்சு நடத்தி அழைத்து சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று வீடு திரும்பிய நிங்கப்பாவை, மனைவியின் குடும்பத்தினர் கம்பு, சுத்தியலால் தாக்கிவிட்டு தப்பினர். உயிருக்கு போராடிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இளம்பெண் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

