ADDED : ஏப் 03, 2025 07:59 AM
விஜயநகரா: ஓடும் பஸ்சில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ஓட்டுநர், நடத்துநர் உட்பட 3 பேர், கைது செய்யப்பட்டனர்.
பெலகாவியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர், விஜயநகரா மாவட்டம் ஹரப்பனஹள்ளி தாலுகா உச்சங்கிதுர்காவில் உள்ள, அம்மன் கோவில் திருவிழாவுக்கு நேற்று முன்தினம் வந்தார். திருவிழா முடிந்ததும் இரவில் சொந்த ஊர் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறினார். பஸ்சுக்குள், 10 பயணியர் இருந்தனர். அவர்கள் அடுத்தடுத்த பஸ் நிறுத்தங்களில் இறங்கினர்.
சிறிது நேரத்தில் பெண் மட்டும் தனியாக இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பஸ் ஓட்டுநர் பிரகாஷ், 42, நடத்துநர் ராஜசேகர், 40, கிளீனர் சுரேஷ், 46, ஆகியோர் ஓடும் பஸ்சில் வைத்து பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர்.
அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சல் போட்டார். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், பஸ்சை மறித்து பெண்ணை மீட்டனர். டிரைவர் உட்பட 3 பேருக்கும் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மூன்று பேரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

