ADDED : ஜன 27, 2025 10:09 PM

- நமது நிருபர் -
ராமாயணத்தில் முக்கிய அத்தியாயமாக விளங்குவது ராமரின் வனவாசம். இந்த வனவாசத்தில் இடம் பெற்ற ஒரு இடமாக உள்ளது ஆவணி மலை. இங்கு, சீதாதேவி கோவில் உள்ளது. இங்கு தான், லவ, குசனை ஈன்றார் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமாயணத்தில் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உணர்ந்து, தந்தை உத்தரவுப்படி ராமர் வனவாசம் சென்றார். அவரது தர்மபத்தினி சீதா தேவியும் உடன் சென்றார். வனவாசம் சென்ற போது இருவரும் தங்கிய மலை சார்ந்த வனப் பகுதி தான் ஆவணி. இங்கு சீதாதேவி தங்குவதற்கு குகை இருந்துள்ளது. இதுவே குகைக் கோவில் என அழைக்கப்படுகிறது. வால்மீகி ஆசிரமம் உள்ளது.
லவன், குசன்
கிழக்கு முகமாக மலையின் கீழ் மற்றும் மத்தியில் கோட்டையும் அமைந்துள்ளது. உச்சியில் சீதாதேவிக்கான சன்னிதியும் உள்ளது. இங்கு தான் சீதாதேவி, லவன் - குசனை பெற்றெடுத்ததாக பக்தர்களின் நம்பிக்கை. பல்வேறு துயர துன்பங்களை சுமந்து ராமரும், சீதாதேவியும் வாழ்ந்தனர் என்பதற்கு இந்த குகை பகுதியே சாட்சி.
மிக சக்தி வாய்ந்த இடமாக உள்ளதால் குகைக் கோவிலில் சீதாதேவியை வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதோர் பாக்கியம் பெறுவர் என்பது நம்பிக்கை. இதற்காக நடக்கும் பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்பதை காணலாம்.
ஆவணி மலை உச்சியில் ஊற்று நீரில் குளித்து, ஈர சேலையுடன் சீதாதேவிக்கு பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை. திருமணம் ஆகாத பெண்கள் வழிபட்டால், திருமணம் நடப்பதாக பலர் பூஜைகள் செய்து வருகின்றனர்.
இங்கு சென்று குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் பலர், தங்களின் குழந்தைகளுக்கு சீதா பெயரையே சூட்டி வருகின்றனர். சீதா ராமன், சீதாபதி, சீதம்மா, சீதை, சீதாதேவி என பெயர் உள்ளவர்களை காணலாம்.
வரலாறு ஊர்ஜிதம்
'தங்கவயல் வரலாற்று' நுாலாசிரியர் சீதாராமன், ஆவணி மலையில் சீதாதேவி கோவிலில் வேண்டுதலின்படி பிறந்ததாகவும், அதனால், சீதாராமன் என பெற்றோர் பெயரிட்டதாகவும் தன் வரலாற்று நுாலில் குறிப்பிட்டு உள்ளார். மலை உச்சியில் ஊற்று நீர் தீர்த்த பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இங்கு ராமலிங்கேஸ்வரா, லட்சுமண லிங்கேஸ்வரா, பாரதேஸ்வரா, சத்ருகனலிங்கேஸ்வரா, வாலி மற்றும் சுக்ரீவர், ராமாஞ்சநேயர், காமாட்சி சன்னிதிகள் உள்ளன. இவை யாவுமே ஆவணி கோவிலின் நுழைவு வாயிலாகவே அமைந்துள்ளது.
லட்சுமண லிங்கேஸ்வரா சன்னிதியில் கர்ப்பகிரகம், நவக்கிரஹகங்கள் உள்ளன. கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கம் மிகப்பெரியதாக காணப்படுகிறது. துவாரபாலகர்கள், பைரவர், பைரவி, விஷ்ணு, விநாயகர் சிற்பங்கள் உள்ளன.
ராமலிங்கேஸ்வரா கோவில், சோழர் மன்னர்களால் கட்டப்பட்டது. இங்கு பல தமிழ் சாசனங்கள் பல உள்ளன. ஆவணி மலை ஆன்மிக தலமாக இருப்பதால் வார நாட்களில் சனி, ஞாயிறு, ஹிந்து பண்டிகைகளின் போது சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
இக்கோவிலில் மஹா சிவராத்திரியின் போது, பிரம்மோற்சவம் நடக்கிறது. கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறையினர் நடத்துகின்றனர்.

