ADDED : பிப் 12, 2025 10:55 PM
பாலக்காடு; கேரள மாநிலம், அட்டப்பாடியில், பழங்குடியினர் வருமானத்தை மேம்படுத்த காளான் வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு குறித்து விளக்கப்பட்டது.
கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் மற்றும் பாலக்காடு வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், பழங்குடியினர் வருமானத்தை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
கேரள மாநிலம், அட்டப்பாடி அகழி ஆராய்ச்சி மையத்தில் நடந்த முகாமை, பெங்களூரு வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் வெங்கடசுப்ரமணியன் துவக்கி வைத்தார். முன்னதாக, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சுமியா வரவேற்றார்.
கரும்பு இனப்பெருக்கு நிறுவன இயக்குநர் கோவிந்தராஜ் தலைமை வகித்து, பழங்குடியினரின் நலனுக்காக அகழி ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளை விளக்கிப் பேசினார்.
இதேபோல, திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் செல்வராஜன், சிறப்பு வாழை வகைகளை பயிரிட விவசாயிகளை அறிவுறுத்தினார். பழங்குடியினரின் வருமானத்தை மேம்படுத்துவதற்காக, காளான் வளர்ப்பு, கொல்லைப்புற கோழி வளர்ப்பு, பழம் மற்றும் காய்கறி பதப்படுத்துதல் குறித்த பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து, கரும்பு இனப்பெருக்கு நிறுவன முதன்மை விஞ்ஞானி புத்திரபிரதாப் மேற்பார்வையில் 'பல்லுயிர் பெருக்கம்' என்ற தலைப்பில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. பழங்குடியின மகளிருக்கான சிறுதானிய உணவு வகைகள் போட்டி மற்றும் ஓவியப்போட்டியில் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், பழங்குடியினருக்கு, ஒரு மாத வயதுடைய கோழிக்குஞ்சுகள், முதலுதவிப் பெட்டிகள், துாள் வெல்லம், காட்டுப்பன்றி விரட்டி மற்றும் திசு வளர்ப்பு வாழை நாற்றுகள் விநியோகிக்கப்பட்டன. அகழி வேளாண்மை உதவி இயக்குநர் ரேகா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.