அயோத்தி ராமர் குறித்த பாடல்: பிரதமர் மோடி பாராட்டி மகிழ்ச்சி
அயோத்தி ராமர் குறித்த பாடல்: பிரதமர் மோடி பாராட்டி மகிழ்ச்சி
UPDATED : ஜன 04, 2024 12:39 PM
ADDED : ஜன 04, 2024 12:25 PM

புதுடில்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிரபல ஆன்மிக பாடகர் ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி பாடியுள்ள ராமர் பஜனைப்பாடலை பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து பாராட்டி உள்ளார்.
உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை முன்னிட்டு, பலர் ராமர் குறித்து கவிதைகள், பாடல்கள், பஜனைகளை பாடி வெளியிட்டு வருகின்றனர்.
பிரபல ஆன்மிக பாடகர் ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி, கடவுள் ராமர் குறித்து பஜனை பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரவி சோப்ரா என்பவர் இந்த பாடலை எழுதியுள்ளார். டி.ஜி. ஸ்டிரிங்ஸ் மற்றும் நீர் ரஹி ஆகியோர் இசையமைத்து உள்ளனர். சுமார் 5:47 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
அயோத்தியில் கடவுள் ராமரை வரவேற்பதில் ஒட்டு மொத்த நாடும் மகிழ்ச்சி அடைகிறது. இந்த சிறப்பான தினத்தை முன்னிட்டு ராமர் மீதான பக்தியில் மூழ்கி உள்ள பக்தர்கள், தங்களது உணர்வுகளை பல்வேறு விதமாக வெளிப்படுத்தி வருகின்றனர். கடவுள் ராமர் குறித்து ஹன்ஸ்ராஜ் ரகுவன்ஷி, பாடிய பஜனை பாடலை கேளுங்கள். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.