UPDATED : ஜன 21, 2024 11:40 PM
ADDED : ஜன 21, 2024 11:39 PM

நம் நாட்டின் முதல் இதிகாசமான ராமாயணத்தை எழுதிய மாமுனிவர் வால்மீகி.
இவர், ஆரம்பத்தில் வழிப்பறிக் கொள்ளையராக இருந்தார். பிறகு நாரதருடனான சந்திப்பிற்கு பின் ஞானம் வரப்பெற்று முனிவரானார். தன் மீது எறும்பு புற்று வளர்ந்திருப்பதைக்கூட அறியாத அளவிற்கு கடும் தவத்தில் இருந்தார். எறும்பு புற்றில் இருந்து வந்தவர் என்பதை வட மொழியில் குறிக்கும் சொல்தான் வால்மீகி.
![]() |
இவருக்கு பிறகுதான் துளசிதாசர் ஹிந்தி மொழியில் ராமாயணத்தை எழுதினார். தமிழில் கம்பர் எழுதினார். உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் ராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. வால்மீகி முனிவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பவன் தான் வால்மீகி பவன்.
வால்மீகி பவன் பார்க்கவேண்டிய ஒரு அற்புதமான தலம். வால்மீகி பவன், ராஜஸ்தானில் இருந்து வெள்ளை பளிங்கு மற்றும் சிவப்பு கற்களால் கட்டப்பட்ட ஒரு அற்புதமான கட்டுமானமாகும். நுழைவாயிலே கட்டடத்தின் பிரமாண்டத்தைச் சொல்கிறது.
![]() |
இந்த பிரமாண்டமான கட்டடத்தில் ஒரே நேரத்தில், 5,000 பேர் தங்க முடியும். தரைதளம் மிகவும் பெரியது. மேல்தளம் உள்ளது. அனைத்தும் மார்பிள் கற்களால் கட்டப்பட்டவை.
இதிகாச ராமாயணத்தின் 24,௦௦௦ பாடல்களும், பவனின் நான்கு பக்க சுவர்களில் முக்கியமான சம்பவங்களை சொல்லும் படங்களுடன் ஹிந்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.
பல சிறந்த அறிஞர்களும், ஆன்மிக பெரியவர்களும் காலங்காலமாக இந்த இடத்திற்கு வந்துள்ளனர். இந்த கட்டடத்தில் ஒரு பெரிய நுாலகம் உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மற்றும் ராமாயணத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளும் இதில் உள்ளன. வரக்கூடிய பார்வையாளர்கள் இந்த நுாலகத்தை இங்கு இருந்தபடி உபயோகித்துக் கொள்ளலாம்.
மண்டபத்தின் மையத்தில் வால்மீகி முனிவர் உள்ளார். பக்தியுடன் மக்கள் அவரை தரிசிக்கின்றனர். இந்த பவனில் தொடர்ச்சியாக ராமயாணம் குறித்த சொற்பொழிவுகள் நடக்கும்.
பல வீட்டில் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்கார்ந்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதை பார்த்திருப்பீர்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவரவர் அவருக்கு தெரிந்த மொழியில் இதை எழுதுகின்றனர்.
இப்படி, 'ராம், ஸ்ரீராம், ஸ்ரீ சீதாராம், ஸ்ரீ ஜெயராம், ஸ்ரீ ராமஜெயம்' என்று மக்களால் எழுதப்படும் நோட்டுப் புத்தங்கள் யாவும் ஆங்காங்கே உள்ள கோவில்கள் மூலமாக கடைசியில் இங்குதான் வந்து சேருகின்றன. இப்படி அன்றாடம் வரும் நோட்டுப்புத்தகங்கள் அனைத்தையும் சரயு நதியில் கலந்துவிடுவர்.