ரூ.10 கோடி தராவிட்டால் தந்தை நிலைதான் உனக்கும்! பாபா சித்திக் மகனுக்கு கொலை மிரட்டல்
ரூ.10 கோடி தராவிட்டால் தந்தை நிலைதான் உனக்கும்! பாபா சித்திக் மகனுக்கு கொலை மிரட்டல்
ADDED : ஏப் 22, 2025 07:24 AM

மும்பை; சுட்டுக் கொல்லப்பட்ட மஹாராஷ்டிரா மாஜி அமைச்சர் பாபா சித்திக் மகனிடம் ரூ.10 கோடி கேட்டு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், மாஜி அமைச்சருமான பாபா சித்திக் கடந்தாண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் கொலை சம்பவம் மஹா. அரசியலில் பெரிதாக பேசப்பட்ட நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பர் என்பதால் திரையுலகிலும் அதிர்ச்சி எதிரொலித்தது.
இந் நிலையில் பாபா சித்திக் மகன் ஜீசன் சித்திக்கிடம் ரூ.10 கோடி கேட்டு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இ-மெயில் மூலமாக அடையாளம் தெரியாத ஒருவரின் மின்னஞ்சல் கணக்கில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.10 கோடி தராவிட்டால் உங்கள் தந்தை பாபா சித்திக்கிற்கு என்ன நடந்ததோ, அதுதான் உங்களுக்கும் நடக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கொலை மிரட்டலை அடுத்து, ஜீசன் சித்திக் உடனடியாக மும்பை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் விசாரணையை தொடக்கி உள்ளனர். மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என சைபர் செல் மூலம் விரிவான விசாரணையில் இறங்கி இருக்கின்றனர்.
இதுகுறித்து ஜீசன் சித்திக் கூறியதாவது; கடந்த 3 நாட்களாக தொடர்ந்து இ மெயிலில் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ரூ.10 கோடி தராவிட்டால் தந்தையின் முடிவு உனக்குத்தான் என்று இ மெயிலில் கூறப்பட்டுள்ளது.
அதை அனுப்பியவர் தாவூத் இப்ராஹிம் கும்பலில் இருந்து தொடர்பு கொண்டு இருப்பதாகவும், போலீசிடம் கூறக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.