புயலின்போது பிறந்த குழந்தைக்கு பெயர் 'டானா': 2,201 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்!
புயலின்போது பிறந்த குழந்தைக்கு பெயர் 'டானா': 2,201 கர்ப்பிணிகளுக்கு பிரசவம்!
ADDED : அக் 26, 2024 08:19 AM

புவனேஸ்வர்: ஒடிசாவில் டானா புயல் கரையை கடந்த போது, பத்ரக் மாவட்டத்தில் பிறந்த குழந்தைக்கு புயலின் பெயரை வைக்க குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
'டானா' புயல் நேற்று ஒடிசாவில் கரையை கடந்தது. மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியதால், கடலோரங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்தன. மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்து இருந்தது. 'அரசின் 'ஜீரோ உயிரிழப்பு' என்ற திட்டத்தின்படி, மிக விரிவான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டதன் விளைவாக, டானா புயலால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இது அரசின் சாதனை' என ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி தெரிவித்தார்.
2,201 குழந்தைகள் பிறப்பு
புயல் காரணமாக, முகாம்களில் தங்க வைக்கப்பட்ட 6 லட்சம் பேரில், 4,859 கர்ப்பிணிகளும் இருந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக சுகாதார மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
அவர்களில் 2,201 பேர் குழந்தை பெற்றெடுத்தனர். இதில் 18 ஜோடிகள் இரட்டை குழந்தை ஆகும். 1,858 குழந்தைகள் சுக பிரசவத்திலும், 343 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளன என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் குழந்தை
ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த துசூரி என்ற பகுதி மருத்துவமனையில் ஒரு பெண் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாய் மற்றும் பிறந்த குழந்தை இருவரும் நலமாக உள்ளனர். டானா சூறாவளியின் போது குழந்தை பிறந்ததால், குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு சூறாவளியின் பெயரை வைக்க திட்டமிட்டுள்ளனர்.
'நாங்கள் அவருக்கு டானா என்று பெயரிட திட்டமிட்டுள்ளோம். சூறாவளியைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டோம். ஆனால் பிரசவத்திற்குப் பிறகு மகிழ்ச்சி அடைந்தோம்”என்று உறவினர் ஒருவர் கூறினார்.