ADDED : ஜன 25, 2024 01:30 AM
புதுடில்லி, பிரபல தொழிலதிபர் கபில் வாத்வான், டி.எச்.எப்.எல். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்தார். அவரது சகோதரர் தீரஜ் வாத்வான், அதன் இயக்குனராக இருந்தார்.
இந்த நிறுவனம், 17 வங்கிகளிடம் இருந்து, 42,871 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. அதில் முறைகேடு செய்யப்பட்டு, வாத்வான் சகோதரர்களின் பெயர்களில் முதலீடுகள் செய்யப்பட்டன.
மேலும், வங்கிக் கடனையும் முறையாக செலுத்தவில்லை. இவ்வாறு, 34,615 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைதான இவர்களுக்கு, கடந்தாண்டு மே மாதத்தில் புதுடில்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதை எதிர்த்து, சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களுடைய ஜாமினை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. உடனடியாக அவர்களை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தாமதமானதாக பொய்யான தகவல் அளித்து இவர்கள் ஜாமின் பெற்றுஉள்ளனர். அதனால் ஜாமின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.