UPDATED : ஜன 25, 2026 05:36 AM
ADDED : ஜன 25, 2026 03:54 AM

மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலில், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று, எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டி விட்டது. மும்பையை அடுத்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு, பிரதமர் நரேந்திர மோடி குறி வைத்துள்ளார். 'பெங்களூரு மாநகராட்சிக்கு, ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும்' என, காங்கிரஸ் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி தேர்வுகள் முடிந்த பின், மே மாதம் இந்த தேர்தல் நடைபெற உள்ளதாம்.
'இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம்' என அழைக்கப்படும் பெங்களூரு மாநகராட்சியை, எப்படியாவது பா.ஜ., கூட்டணி கைப்பற்ற வேண்டும்' என, பிரதமர் உத்தரவிட்டுள்ளாராம். 'பிரஹட் பெங்களூரு மகாநகர பாலிகே' என்ற கார்ப்பரேஷன் அமைப்பை, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, 'கிரேட்டர் பெங்களூரு அதாரிட்டி' என, கடந்தாண்டு நவம்பரில் மாற்றி அமைத்தது. 198 வார்டுகள் இருந்ததை, இப்போது, 369 வார்டுகளாக உயர்த்தியுள்ளது மாநில அரசு. பெங்களூருவிற்கு அருகிலுள்ள பகுதிகளையும் இணைத்து, பெங்களூரு அதாரிட்டியின் பரப்பு, 1,400 சதுர கி.மீ., அளவுக்கு விரிந்துள்ளது.
நாட்டின், 18 லட்சம் கோடி ரூபாய் ஐ.டி., ஏற்றுமதியில், பெங்களூரு முக்கிய இடம் பிடித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல ஸ்டார்ட்அப் கம்பெனிகள், விமான உற்பத்தி தொழிற்சாலை, ஆராய்ச்சி அமைப்புகள் என, பெங்களூரு பல விஷயங்களில் முதலிடம் பிடித்துள்ளது. இருப்பினும், இங்கு சரியான கட்டமைப்பு இல்லாததால், சில நிறுவனங்கள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டன.
'ஊழல் ஏகத்துக்கும் பெருகிவிட்டது. இதற்கு முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் தான் காரணம்' என, பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
'டிராபிக்' பிரச்னைகள், குண்டும் குழியுமான சாலைகள் என, பல பிரச்னைகளை மக்கள் தினசரி சந்தித்து வருகின்றனர். 'மத்திய அரசிடமிருந்து, கர்நாடகாவிற்கு போதிய நிதி உதவி கிடைக்கவில்லை' என, மத்திய அரசு மீது பழி போடுகிறார் முதல்வர்.
'பெங்களூரு மாநகராட்சி எங்கள் கைக்கு வந்தால் அனைத்தையும் சரி செய்வோம்' என, பா.ஜ., கூட்டணி பிரசாரம் செய்ய இருக்கிறது.
நாடு முழுக்க மின்னணு ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு பதிவிற்காக பயன்பட்டு வரும் நிலையில், 'பெங்களூரு மாநகராட்சி தேர்தல், ஓட்டுச் சீட்டு மூலமாகத் தான் நடைபெறும்' என, மாநில அரசு அறிவித்துள்ளது, மேலும் சிக்க லை ஏற் படுத்தியுள்ளது.

