‛'டிராபிக் ஜாம்' பட்டியலில் உலகளவில் பெங்களூருக்கு 6வது இடம்!: பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டும் பலன் பூஜ்ஜியம்
‛'டிராபிக் ஜாம்' பட்டியலில் உலகளவில் பெங்களூருக்கு 6வது இடம்!: பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டும் பலன் பூஜ்ஜியம்
ADDED : பிப் 04, 2024 11:10 PM

பெங்களூரு: வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள, உலக நகரங்களின் பட்டியலில் பெங்களூரு ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இந்திய நகரங்களின் பட்டியலில், முதலிடத்தில் உள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, பல ஆயிரம் கோடியை அரசுகள் செலவிட்டும், பலன் என்பது பூஜ்ஜியமாகவே உள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரு, 'சிலிகான் சிட்டி, கார்டன் சிட்டி, ஐ.டி., சிட்டி' உட்பட, பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ஆனால் இங்குள்ள பிரச்னைகள் ஏராளம். குப்பை மற்றும் வாகன போக்குவரத்து நெருக்கடி பிரச்னைகள், மக்களை வாட்டி வதைக்கின்றன. இன்று, நேற்று அல்ல பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்னைகளாக இவை தொடர்கின்றன.
தீராத தலைவலி
உலக மக்களுக்கு பிடித்தமான நகரங்களில் ஒன்று பெங்களூரு. ஆனால் இவர்கள் வெறுக்கும் ஒரே விஷயம், நகரின் போக்குவரத்து நெரிசல். இதே காரணத்தால் உலக அளவில், பெங்களூருக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
வாகன நெருக்கடியில் சிக்கிய இளம் பெண் ஒருவர், ரேபிடோ பைக்கில் அமர்ந்தபடி, மடி கணினியில் தன் அலுவலக பணியை செய்தார். சாலையில் பணியாற்றிய இவரது வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது.
அதேபோன்று, இளைஞர் ஒருவர் காரில் செல்லும் போது, வாகன நெருக்கடியில் சிக்கினார். காரில் அமர்ந்து பணியாற்றினார். இது போன்ற சம்பவங்கள், அவ்வப்போது நடந்து, பெங்களூரின் போக்குவரத்து நெரிசலின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
சில நாட்களுக்கு முன், காரில் மணப்பெண் ஒருவர், அலங்காரத்துடன் திருமண மண்டபத்துக்கு புறப்பட்டார். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். அதன்பின் காரை விட்டு விட்டு, மெட்ரோ ரயிலில் பயணித்து திருமண மண்டபத்தை அடைந்தார். இது போன்று பல உதாரணங்கள் உள்ளன.
இதை சுட்டிக்காண்பித்து, சமூக வலைதளங்களில் கிண்டலாக பலரும் விமர்சிக்கின்றனர். தொழிலதிபர்களும் கூட, இந்த பிரச்னையை அரசிடம் விவரித்து, தீர்வு காணும்படி அறிவுறுத்தினர்.
மேம்பாலங்கள்
மாநிலத்தில் ஆட்சிக்கு வரும், ஒவ்வொரு அரசும் பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி பிரச்னைக்கு, முக்கியத்துவம் அளிக்கின்றன. இதற்கு தீர்வு காண்பதாக சூளுரைக்கின்றன. அதன்படியே பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டு, மேம்பாலங்கள் கட்டுவது, சுரங்கப்பாதை அமைப்பது, மெட்ரோ ரயில் திட்டம் என, பல திட்டங்களை செயல்படுத்துகின்றன.
மற்றொரு பக்கம், மாநகராட்சியும் பணத்தை தண்ணீராக செலவிடுகிறது. ஆனால், பலன் என்னவோ பூஜ்யம். தற்போதைய அரசில், பெங்களூரு நகர வளர்ச்சித்துறை அமைச்சருமான, துணை முதல்வர் சிவகுமார், 'பிராண்ட் பெங்களூரு' திட்டம் வகுத்துள்ளார்.
இது குறித்து, பொது மக்கள், தொழிற சங்கங்கள், நகர வல்லுனர்கள் உட்பட, பலரிடம் நகரின் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் குறித்து ஆலோசனை கேட்டார். 70,000 க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் வந்துள்ளன.
இவற்றில் பெரும்பாலான ஆலோசனைகள், போக்குவரத்து நெருக்கடி சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் மக்கள் தொகையை விட, வாகனங்கள் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு சாலையிலும், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன. இது போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகிறது. அரை கி.மீ., துாரம் செல்ல, ஒரு மணி நேரம் ஆகிறது. பல நேரங்களில் நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள், வாகன நெரிசலில் சிக்கி நகர முடியாமல் நின்ற சம்பவங்களும் நடந்துள்ளன.போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகளே, பெங்களூரில் இல்லை.
முதல் இடம்
இந்நிலையில் நகரவாசிகளுக்கு, அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டில் மிக அதிகமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட உலக நகரங்களின் பட்டியலில் பெங்களூரு ஆறாவது இடத்தில் உள்ளது. இந்திய நகரங்களின் பட்டியலில், முதல் இடத்தில் உள்ளது.
லண்டனின், 'டாம் டாம்' என்ற நிறுவனம், இந்தியா உட்பட, உலக நாடுகளின் போக்குவரத்து நெருக்கடி குறித்து, ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. இதன்படி மிக அதிகமான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட இந்திய நகரங்களின் பட்டியலில் முதல் இடத்திலும், உலக நகரங்களில் ஆறாவது இடத்திலும் பெங்களூரு உள்ளது.
கடந்த 2022ல், நெருக்கடி மிகுந்த உலக நகரங்களின் பட்டியலில், பெங்களூரு இரண்டாவது இடத்தில் இருந்தது. இம்முறை ஆறாவது இடத்துக்கு வந்துள்ளது. 2022ல் மணிக்கு 14 கி.மீ., செல்ல முடிந்தது. 2023ல், மணிக்கு 18 கி.மீ., துாரம் பயணிக்க முடிந்ததாக, அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
இது, நகரின் பெருமைக்கு கரும்புள்ளியாக உள்ளது. பெங்களூரின் பெயரை கேட்டால், இதுதான் சட்டென நினைவுக்கு வருகிறது. வரும் நாட்களில் வாகன எண்ணிக்கை, மேலும் அதிகரிக்கும். எனவே தொலைநோக்கு பார்வையுடன், அரசு திட்டங்கள் வகுக்க வேண்டும்' என, நகர வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வாகன போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு, தீர்வு காண அரசால் மட்டுமே முடியாது. இதில் பொது மக்களும் கைகோர்க்க வேண்டியது அவசியம். முடிந்த வரை சொந்த வாகனங்களை தவிர்த்து, அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களை பயன்படுத்த வேண்டும்.
வீட்டில் நான்கு பேர் இருந்தால், ஒரே இடத்துக்கு செல்ல தனித்தனி வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தால் சாலையில் இறங்கும் வாகனங்கள் எண்ணிக்கை குறையும்.
போக்குவரத்து நெரிசல் பிரச்னையை கட்டுப்படுத்தி, நகரின் பழைய பெருமையை கொண்டு வரலாம்' எனவும், வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

