வங்கதேச வீரருக்கு 'நோ' :கோல்கட்டா அணி விடுவிப்பு
வங்கதேச வீரருக்கு 'நோ' :கோல்கட்டா அணி விடுவிப்பு
ADDED : ஜன 04, 2026 02:17 AM

கவுகாத்தி: பிரிமியர் தொடரில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிஜுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டார்.
இந்தியாவில், பிரிமியர் லீக் 'டி-20' தொடரின் 19வது சீசன், மார்ச் 26ல் துவங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் நடந்தது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மானை, ரூ. 9.20 கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியது. தற்போது வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. இதனால், முஸ்தபிஜுரை வாங்கிய கோல்கட்டா அணிக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் தேவஜித் சைகியா கூறுகையில்,'' கோல்கட்டா அணியில் உள்ள வங்கதேச வீரர் முஸ்தபிஜுரை விடுவிக்குமாறு தெரிவித்துள்ளோம். மாற்று வீரர் தேவை எனில், அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்,'' என்றார்.
கோல்கட்டா அணி தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், 'பி.சி.சி.ஐ., அறிவுறுத்தலின்படி முஸ்தபிஜுர் விடுவிக்கப்பட்டார்,' என தெரிவித்துள்ளது. பிரிமியர் தொடர் வரலாற்றில் முதன் முறையாக, இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
சம்பளம்
கிடைக்குமா
பிரிமியர் விதிப்படி ஒரு வீரர் ஒப்பந்தம் செய்யப்பட்டாலே, அணியில் இணைந்ததாக எடுத்துக் கொள்ளப்படும். களமிறங்கும் அணியில் இடம் பெறவில்லை என்றாலும் அல்லது அணி நிர்வாகம் விடுவித்தாலும், அந்த வீரருக்கு முழு சம்பளம் தரப்பட வேண்டும். இதன் படி, முஸ்தபிஜுர், இந்தியா வரவில்லை என்றாலும், ரூ.9.20 கோடி கிடைக்கலாம்.

