வங்கதேச இடைக்கால அரசு மதவாதிகளுடன் கைகோர்ப்பு: எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் குற்றச்சாட்டு
வங்கதேச இடைக்கால அரசு மதவாதிகளுடன் கைகோர்ப்பு: எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் குற்றச்சாட்டு
ADDED : ஜன 10, 2026 12:46 AM

திருவனந்தபுரம்: “வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், மதவாதிகளுடனும், பிளவை ஏற்படுத்தும் சக்திகளுடனும் கைகோர்த்துள்ளார்,” என, அந்நாட்டின் பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர் தஸ்லிமா நஸ்ரின், 63. பிரபல எழுத்தாளரான இவர், தன் நுால்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதியதால், முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்புக்கு உள்ளானார்.
இதையடுத்து, தஸ்லிமா நஸ்ரினை வங்கதேச அரசு நாடு கடத்தியது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடான ஸ்வீடன் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார்.
இந்நிலையில், கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த சர்வதேச புத்தகக் காட்சியில் சிறப்பு விருந்தினராக தஸ்லிமா நஸ்ரின் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: என் புத்தகங்களால் சில மதவாதிகள், எனக்கு கொலை மிரட்டல்களை விடுத்தனர். அதற்கு எதிராக அப்போதைய வங்கதேச அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் வங்கதேசம், இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது.
அந்நாட்டில், பிரிவினைவாதிகள் தான் அதிகாரத்தில் உள்ளனர். தற்போது ஆட்சி செய்யும் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், மதவாதிகளுடனும், பிளவை ஏற்படுத்தும் சக்திகளுடனும் கைகோர்த்துள்ளார். இதனால், 1971ல் பாகிஸ்தானுக்கு எதிராகப் போராடி பெற்ற மதச்சார்பற்ற நாட்டை, நாம் மீண்டும் எப்படி பெறுவோம் என்று எனக்குத் தெரியவில்லை.
இப்போது, நாடு பிளவுபட்டுள்ளது. முஸ்லிம் மதவாதிகள், சிறுபான்மை சமூகங்களைக் கொன்று துன்புறுத்துகின்றனர். மதவெறியர்களின் ஆதரவைப் பெற்று நீண்டகாலம் ஆட்சியில் இருப்பதற்காக, மதச்சார்பற்ற கல்வி நிலையங்கள் மற்றும் அறிவியல் மையங்களை உருவாக்காமல் வங்கதேச அரசு மதப் பள்ளிக்கூடங்களைக் கட்டுவதில் ஆர்வம் காட்டி வருகிறது. இச்செயல்பாடுகளை வங்கதேச அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

