ADDED : செப் 11, 2026 08:14 PM
– சிறப்பு நிருபர் –: ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்று நடக்கும் நிலையில், டில்லியில் நேற்று, பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்தித்து பேச்சு நடத்தினார். அப்போது, அவரை ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி, ‘உலக பொதுமறை’ என்றழைக்கப்படும் திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, பிரிக்ஸ் எனப்படுகிறது. இந்த அமைப்பில், ஈரான், இந்தோனேஷியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, எகிப்து ஆகிய ஆறு நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தாண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, தலைநகர் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ரஷ்ய அதிபர் புடின் நேற்று காலை தனி விமானத்தில் டில்லி வந்தார். அவரை மத்திய அரசின் உயரதிகாரிகள் நேரில் வரவேற்றனர்.
இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே, டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புடின் நேற்று சந்தித்து பேசினார். அவரை ஆரத்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி, திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் புத்தகத்தை பரிசளித்தார்.
அப்போது, பொருளாதாரம், ராணுவம், எரிசக்தி, விண்வெளி, வர்த்தகம், அரியவகை கனிமங்கள், முதலீடு உள்ளிட்ட துறைகளில், இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். கடல்வழி வர்த்தகம், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை பாதித்துள்ள மேற்காசியா மற்றும் கருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.
வரும், 2030க்குள் இரு தரப்பு வர்த்தகத்தை, 9.55 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ‘எஸ் – 400’ வான் பாதுகாப்பு அமைப்பு, ‘சுகோய் – 57’ போர் விமான வினியோகம் குறித்தும் ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இவற்றை விரைவில் வழங்குவதாக ரஷ்யாவும் உறுதி அளித்துள்ளது.
பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புடின் இரு வாரங்களில் இரண்டாவது முறை சந்தித்துள்ளார். முன்னதாக, கடந்த 31ல், மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில், இரு தலைவர்களும் சந்தித்தனர்.
