sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பதவி போகும்

/

பதவி போகும்

பதவி போகும்

பதவி போகும்


ADDED : ஆக 21, 2025 01:41 AM

Google News

ADDED : ஆக 21, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரதமரே ஆனாலும் கிரிமினல் குற்ற வழக்கில் கைதானால், தானாக பதவி பறிபோகும் வகையிலான புதிய மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த இம்மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதன் நகலை கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால், சபையில் பரபரப்பு ஏற்பட்டது. பார்லி., நேற்று காலை கூடியதும், பீஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், பார்லிமென்டின் இரு சபைகளும் மதியம் 12:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பின்னர் மீண்டும் லோக்சபா கூடியபோது, மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய மசோதாவை தாக்கல் செய்தார்.

அப்போது, எதிர்க்கட்சி எம்.பி.,க்களான மணிஷ் திவாரி, பிரேம சந்திரன் உள்ளிட்டோர் மசோதாவை தாக்கல் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக சபையில் விவாதிக்க வேண்டும் என கூறி கூச்சலிட்டனர். இதனால், கடும் அமளி ஏற்பட்டது.

அப்போது இருக்கையில் இருந்து எழுந்த பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ''கடும் அமளியில் ஈடுபட்டாலும், சபை அலுவல்கள் தடைபடாது; தொடர்ந்து நடக்கும்,'' என ஆவேசமாக பேசினார்.

இதனால், எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் ரகளை அதிகமாக, லோக்சபா மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மதியம் 2:00 மணிக்கு சபை கூடியதும், எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் பெரும் அமளிக்கு இடையே, பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைதான 31 நாட்களில் தானாக பதவி இழக்க வகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்தின் 130வது திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் நிர்வாக திருத்த மசோதா மற்றும் ஜம்மு- - காஷ்மீர் மறு சீரமைப்பு திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.

அறிமுக நிலையிலேயே இம்மசோதாக்களுக்கு, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

காங்., - எம்.பி.,யான மணிஷ் திவாரி, ''இந்த மசோதாக்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானவை,'' என விமர்சித்தார். ஆர்.எஸ்.பி., - எம்.பி., பிரேம சந்திரன், ''அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாக்களை படித்து புரிந்து கொள்வதற்கு கூட கால அவகாசம் தராமல், அவசர கதியில் நிறைவேற்ற துடிப்பதற்கு என்ன காரணம்?'' என, கேள்வி எழுப்பினார்.

காங்., - எம்.பி.,யான கே.சி. வேணுகோபால், ''அரசியலில் நேர்மையுடன் நடக்க வேண்டும் என அறிவுரை கூறினால் மட்டும் போதாது. வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும். குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது குற்ற வழக்கில் சிக்கி கைதானதை மறந்து விட்டீர்களா? அப்போது உங்களது நேர்மை எங்கே சென்றது?

''குற்ற வழக்கில் சிக்கிய உங்களுக்கு இந்த மசோதாக்களை தாக்கல் செய்வதற்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது,'' என அமித் ஷாவை நோக்கி காட்டமாக குற்றஞ்சாட்டினார்.

இதனால் கோபாமான அமைச்சர் அமித் ஷா, ''உண்மைக்கு புறம்பான தகவலை கூற வேண்டாம். அந்த வழக்கில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை. அப்போதும் கூட விசாரணைக்காக பொறுப்புடன் ஒத்துழைத்தேன். கைதாகி சிறைக்கு செல்லும் முன்பாகவே, அமைச்சர் பதவியில் இருந்து தார்மீக அடிப்படையில் விலகினேன். இறுதியாக வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவிக்கும் வரை, எந்த பதவியையும் நான் ஏற்கவில்லை,'' என கூறினார்.

எனினும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். சபையின் மையப்பகுதிக்கு சென்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஒரு சில எம்.பி.,க்கள் மசோதாக்களின் நகலை கிழித்து அமித் ஷாவை நோக்கி குப்பை போல வீசியெறிந்தனர்.

இதனால், கடும் கூச்சல், குழப்பம் நிலவியதை அடுத்து சபையை, சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் சபை, மதியம் 3:00 மணிக்கு கூடியபோது, மூன்று முக்கிய மசோதாக்களையும் அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை பார்லிமென்ட்டின் கூட்டு குழுவின் ஆய்வுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு சொல்வது என்ன? அரசியலமைப்பு மற்றும் நெறிமுறைகளை பாதுகாக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான நம்பிக்கையை உறுதி செய்யவும் இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், மக்களின் நம்பிக்கையை பெற்றவர்கள் தான். இருப்பினும் கடுமையான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படும்போது, பிரதமர் அல்லது அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கு தற்போது அரசியல் சட்டத்தில் எந்த விதியும் இல்லை. பதவியில் உள்ளவர்களின் நடத்தை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் ஒரு அமைச்சர் கைது செய்யப்பட்டால், அது அரசியலமைப்பு மீது, மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க செய்து விடும். இதை தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



எதிர்ப்பு ஏன்? தற்போதுள்ள சட்டத்தின்படி, குற்ற வழக்குகளில் சிக்கிய அமைச்சர்கள், முதல்வர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு பதவியை இழப்பர். மதுபான வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் இருந்தபடியே முதல்வராக தொடர்ந்தார். அப்படியான நடைமுறைகளை ஒழித்து கட்டும் வகையிலேயே இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் எதிரிகளை பழிவாங்கும் வகையில், இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. இதன் காரணமாகவே மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.



130வது திருத்தச் சட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்த மூன்று மசோதாக்களும் பார்லி., கூட்டுக்குழுவின் ஆய்வுக்குப் பின் மீண்டும் தாக்கல் செய்யப்படும். அரசியலமைப்பை திருத்தும் அவசியம் இருப்பதால், இம்மசோதா நிறைவேற சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவை. அதன் அடிப்படையில் பார்லி.,யில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டால், அரசியலமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்படும் 130வது திருத்தமாக இது இருக்கும்.



அத்துமீறிய அமைச்சர்கள்? பார்லி.,யில் மூன்று மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகம் செய்தபோது, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அமளியில் ஈடுபட்ட திரிணமுல் காங்., பெண் எம்.பி.,க்களை மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜுவும், ரவ்நீத் சிங் பிட்டுவும் பிடித்து தள்ளி, அத்துமீறி நடந்து கொண்டதாக அக்கட்சி எம்.பி.,யான கல்யாண் பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். அநாகரிகமாக நடந்து கொண்ட அமைச்சர்கள் இருவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



-நமது டில்லி நிருபர்-






      Dinamalar
      Follow us