'எக்ஸ்' பயனர்கள் கணக்குகள் முடக்கம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விவாதம்
'எக்ஸ்' பயனர்கள் கணக்குகள் முடக்கம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விவாதம்
ADDED : ஜன 31, 2024 07:36 AM
பெங்களூரு : 'சமூக வலைத்தள பயனர்கள் கணக்குகளை முடக்குவது, கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயல்' என, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 'எக்ஸ்' தரப்பு வக்கீல் வாதாடினார்.
'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில், தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்து பதிவிட்ட, சில பயனர்களின் கணக்குகளை மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை 2021ல் முடக்கியது. இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், 'எக்ஸ்' சமூக வலைத்தள தரப்பினர், மனு செய்தனர்.
இந்த மனுவை தலைமை நீதிபதியாக இருந்த, பிரசன்னா வரலே விசாரித்து வந்தார். தற்போது அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார். நேற்று முன்தினம் 'எக்ஸ்' தொடர்பான வழக்கை, தற்காலிக தலைமை நீதிபதி தினேஷ்குமார் விசாரித்தார்.
'எக்ஸ்' தரப்பு வக்கீல் சஜன் வாதாடுகையில், ''நாங்கள் பேச்சு, கருத்து சுதந்திரத்தை அடிப்படையாக கொண்ட தொழில் செய்கிறோம். எங்கள் பயனர்களின் கணக்குகளை முடக்கினால், நாங்கள் எப்படி தொழில் நடத்துவது. பயனர்கள் கணக்குகளை முடக்குவது, கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயல்,'' என்றார்.
மத்திய அரசு வக்கீல் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தினேஷ்குமார், அடுத்த விசாரணையின்போது, மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கூறி, விசாரணையை ஒத்திவைத்தார்.