இறுதி ஊர்வலத்தில் படையெடுத்த தேனீக்கள்: சாலையில் உடலை போட்டு உறவினர் ஓட்டம்
இறுதி ஊர்வலத்தில் படையெடுத்த தேனீக்கள்: சாலையில் உடலை போட்டு உறவினர் ஓட்டம்
ADDED : மார் 30, 2025 04:00 AM

விஜயவாடா: ஆந்திராவில் இறுதி ஊர்வலத்தில் தேனீக்கள் படையெடுத்ததால், சாலையிலேயே சடலத்தை போட்டுவிட்டு உறவினர்கள் ஓட்டம் பிடித்தனர்.
தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள பட்டபத்தியில் கடந்த மாதம், 72 வயது முதியவர் இறந்தபோது, இறுதிச் சடங்கு நடத்த அவரது உடலை உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.
70 வயது மூதாட்டி
அப்போது, இறுதி ஊர்வல பாதையில் தேனீக்கள் புகுந்து, ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை கொட்டியது. அதில் உயிரிழந்தவரின் மனைவி, குடும்பத்தினர் உட்பட 40 பேர் காயமடைந்தனர்.
இதுபோல, உ.பி.,யிலும் பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள நாகல அரிச்சந்திரா கிராமத்தில், கடந்த 17ம் தேதி, 70 வயது மூதாட்டியின் இறுதி ஊர்வலத்தில் தேனீக்கள் புகுந்தது.
இதில், மூதாட்டியின் உடலை சுமந்து சென்றவர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். மூதாட்டி உடலை போட்டுவிட்டு, உறவினர்கள் ஓட்டம் பிடித்ததால், எட்டு மணி நேரம் தாமதத்துக்கு பின், போலீசார் உதவியுடன் இறுதிச்சடங்கு நடந்தது.
இந்த சம்பவங்களைப் போலவே, ஆந்திராவிலும் தேனீ துரத்தல் சம்பவம் நேற்று நடந்தது. இங்குள்ள அல்லுரி சித்தராமராஜு மாவட்டத்தின் எடபக்கா தாலுகாவில் உள்ள கவுரிதேவி பேட்டையில் ஒருவர் உயிரிழந்தார். வீட்டில் இறுதிச் சடங்குகள் நடந்த பின், உடலை அடக்கம் செய்வதற்காக ஊர்வலமாக உறவினர்களும், ஊர் மக்களும் எடுத்துச் சென்றனர்.
மரங்கள் நிறைந்த பகுதி யில் இறுதி ஊர்வலம் சென்றது. அப்போது ஊர்வலத்தில் சென்றவர்கள் பட்டாசுகளை வெடித்தனர். பட்டாசு சத்தம் கேட்டதால் திடீரென ஏராளமான தேனீக்கள் படையெடுத்து வந்தன.
அட்டகாசம்
இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களை சரமாரியாக தேனீக்கள் கொட்டியதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால், மற்றவர்கள், தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, சடலத்தை சாலையிலேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.
மற்றவர்களுக்கு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பல மணி நேரத்துக்குப் பின், தேனீக்கள் அட்டகாசம் குறைந்ததும், சாலையில் விட்டுச்சென்ற உடலை எடுத்துச் சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர்.