பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளியின் நண்பர் கைது
பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளியின் நண்பர் கைது
ADDED : மார் 14, 2024 12:42 AM
பல்லாரி, பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியின் நெருங்கிய நண்பர், பல்லாரியில் நேற்று கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் பெங்களூரு, மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில், இம்மாதம் 1ம் தேதி குண்டு வெடித்தது.
இச்சம்பவம் தொடர்பாக, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய குற்றவாளி, பஸ்சில் துமகூரு மார்க்கமாக பல்லாரி சென்றது, சிசிடிவி காட்சிகள் வாயிலாக உறுதியானது. என்.ஐ.ஏ., அதிகாரிகளும் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
குண்டு வெடிப்பில் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் எனக் கருதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்த நான்கு பேரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், காவலில் எடுத்து விசாரித்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பல்லாரி நகரின், கவுல் பஜார் புதிய பஸ் நிலையம் சாலையில் வசித்து வந்த ஷபீர், 32, என்பவரை, நேற்று அதிகாலை 4:00 மணியளவில் கைது செய்தனர்.
இவர், குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஷபீருக்கும், ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். ஷபீர், பல்லாரியின் தோரணகல் ஜிந்தால் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த தினத்தன்று, முக்கிய குற்றவாளியுடன் பலமுறை மொபைல் போனில் பேசியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், குண்டு வெடிப்புக்கு பின், பல்லாரிக்கு வந்த முக்கிய குற்றவாளி, ஷபீரை சந்தித்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது பெங்களூரில் ரகசிய இடத்தில் வைத்து ஷபீரிடம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு குழு, பல்லாரியில் முகாமிட்டு விசாரிக்கிறது.
