பெங்களூரு குண்டுவெடிப்பு: சதிகாரர்கள் இருவர் மே.வங்கத்தில் கைது
பெங்களூரு குண்டுவெடிப்பு: சதிகாரர்கள் இருவர் மே.வங்கத்தில் கைது
UPDATED : ஏப் 12, 2024 03:59 PM
ADDED : ஏப் 12, 2024 10:58 AM

பெங்களூரு: பெங்களூரு ‛ராமேஸ்வரம் கபே' என்ற ஹோட்டலில் குண்டு வைத்தவர் மற்றும் அதற்கு மூளையாக செயல்பட்ட நபர் என இரண்டு பேரை மேற்கு வங்க மாநிலத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
அடையாளம்
கர்நாடக மாநிலம் பெங்களூரில், ‛ராமேஸ்வரம் கபே' என்ற ஹோட்டலில், மார்ச் 1ல் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், ஹோட்டல் ஊழியர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு குற்றவாளிகளாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முஸாவிர் ஹூசைன் ஷாகிப், 30, அப்துல் மதீன் தாஹா,30, ஆகியோரை அடையாளம் கண்டுள்ளனர்.
சோதனை
இவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்களின் கூட்டாளி முஸாமில் ஷெரீப்,32 ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பல இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கைது
இந்நிலையில், முஸாவிர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மதீன் தாஹா ஆகியோரை மேற்கு வங்க மாநிலத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இதில், முஸாவிர் ஹூசைன் ஷாகிப், ஹோட்டலில் குண்டு வைத்ததும், அப்துல் மதீன் தாஹா என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

