ADDED : பிப் 24, 2024 04:33 AM
பெங்களூரு : பா.ஜ.,வுக்கு எதிராக அவதுாறு பிரசாரம் செய்ததாக தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. 2023 சட்டசபை தேர்தலின்போது, அன்றைய பா.ஜ., அரசுக்கு எதிரான 40 சதவீதம் கமிஷன் குற்றச்சாட்டு, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் இதே விஷயத்தை பயன்படுத்தி பிரசாரம் செய்தனர்.
அன்றைய முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட, பா.ஜ., தலைவர்களுக்கு எதிராக ஊடகங்களில், 'கரப்ஷன் ரேட்' உட்பட பலவிதமான விளம்பரங்களை காங்கிரஸ் வெளியிட்டது. தேர்தல் நேரத்தில் இத்தகைய விளம்பரம் வெளியிட்டதால், தலைமை தேர்தல் ஆணையம், அக்கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியது.
'சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் வெளியிட்ட விளம்பரத்தால், பா.ஜ.,வின் கவுரவம் பாதிக்கப்பட்டது' எனக் கூறி, பெங்களூரு நீதிமன்றத்தில், பா.ஜ., தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், காங்கிரஸ் எம்.பி., ராகுல், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோருக்கு, நேற்று சம்மன் அனுப்பியது. மார்ச் 28ல், விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.