ADDED : ஜன 27, 2026 02:43 AM

முசாபர்பூர்: ''உலகின் முன்னணி குடியரசாக நம் நாடு உருவாக, குடிமக்கள் அனைவரும் அரசியல் சாசன கடமைகளை நேர்மையாக நிறைவேற்ற வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தி உள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி, பீஹார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றி வைத்து மோகன் பாகவத் மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: அரசியல் சாசனம் நமக்கு தர்மத்தை போதிக்கிறது. அதை தவறாமல் படிக்கும் பழக்கத்தை மக்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான், நாட்டிற்காக ஆற்ற வேண்டிய கடமைகள் நினைவிலேயே இருக்கும். நம் சட்டங்களை மதித்து நடப்பது முதன்மை கடமை. நம் முன்னோர் செய்த மகத்தான தியாகத்தால், நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. நம் நாட்டை முன்னணி குடியரசு நாடாக உருவாக்க, மக்கள் அனைவரும் அரசியல் சாசன கடமைகளை நேர்மையாக நிறைவேற்ற வேண்டும்.
தேசியக் கொடியில் உள்ள காவி நிறம் தியாகம், ஆற்றல் மற்றும் நம் நாட்டின் புராதன கலாசாரத்தை குறிக்கிறது. நடுவில் உள்ள வெள்ளை நிறம் துாய்மையான எண்ணத்தையும், கடைசியில் உள்ள பச்சை நிறம், முன்னேற்றம், செழுமை மற்றும் தொடர் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. நடுவில் உள்ள அசோக சக்கரம், அனைத்து முன்னேற்றங்களும் தர்மத்தின் வழியில் நடக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

