சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை
சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை
ADDED : ஜன 22, 2024 06:22 AM

துமகூரு: ''மறைந்த மடாதிபதி சிவகுமார சுவாமிக்கு, பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து கடிதம் எழுதுவேன்,'' என்று, முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
துமகூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதியாக இருந்தவர் சிவகுமார சுவாமி. நடமாடும் கடவுள் என்று பக்தர்களால் அழைக்கப்பட்டவர். வயோதிகத்தால் 2019ம் ஆண்டு ஜனவரி 21ல் மறைந்தார்.
நேற்று அவரின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள். இதையொட்டி சித்தகங்கா மடத்தில் சிவகுமார சுவாமி நினைவாக, ஸ்மிருதி வனம் என்ற பெயரில் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. அந்த கட்டடத்தை முதல்வர் சித்தராமையா நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கடந்த 12ம் நுாற்றாண்டில் ஜாதி, வர்க்க பேதம் அற்ற சமுதாயத்தை கட்டியெழுப்ப, பசவண்ணர் புரட்சி மேற்கொண்டார். அவரது விருப்பங்களை நிறைவேற்ற தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சிவகுமார சுவாமி. இந்திய அரசியலமைப்பு சட்டம், பசவண்ணர் போராட்டத்தின் விருப்பம் ஒன்றே தான். சிவகுமார சுவாமியால் இன்று 10 ஆயிரம் குழந்தைகளுக்கு கல்வி, தங்குமிடம் கிடைத்து உள்ளது.
சமூகத்தில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த, வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர் அவர். அவரது பணியும், பக்தர்கள் மீது கொண்ட அக்கறையும் இந்த மண்ணில் எப்போதும் அழியாமல் இருக்கும். சிவகுமார சுவாமிக்கு நாட்டின் உயரிய விருதான, பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.