விலையில் ஏற்ற, இறக்கம் இல்லாததால் 'பாரத்' அரிசி, கோதுமை திட்டம் ரத்து
விலையில் ஏற்ற, இறக்கம் இல்லாததால் 'பாரத்' அரிசி, கோதுமை திட்டம் ரத்து
ADDED : ஜூன் 07, 2025 02:28 AM

புதுடில்லி: சந்தையில் அரிசி, கோதுமை, பருப்பு ரகங்களின் விலை சீராக நீடிப்பதால், மலிவு விலை விற்பனைக்கான, 'பாரத் பிராண்டு' திட்டம் கைவிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமச்சீரற்ற பருவநிலை, சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், 2023 இறுதியில், அரிசி, பருப்பு ரகங்கள், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களின் சில்லரை விலை கடுமையாக அதிகரித்தது.
விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, பாரத் பிராண்டு என்ற பெயரில், மானிய விலையில் உணவு தானியங்கள் விற்பனையை மத்திய அரசு துவக்கியது.
குறைந்த விலை
பின், 2024 ஜூன் மாதத்தில், பாரத் பிராண்டு பொருட்கள் விற்பனையை அரசு கைவிட்டது. எனினும், ஆண்டு இறுதியில் பண்டிகை சீசனை முன்னிட்டு, மீண்டும் குறைந்த விலையில் பொருட்கள் விற்கப்பட்டன.
இதில் கடலை பருப்பு, துவரம்பருப்பு, அரிசி, கோதுமை ஆகியவை குறைந்த விலையில் வெளிச்சந்தையில் விற்பனை ஆகின்றன. 30,000 டன் கடலை பருப்பு மட்டும் இதற்காக அரசு கையிருப்பில் இருந்து, பாரத் பிராண்டு வாயிலாக வெளியிடப்பட்டது.
பணவீக்கம் வீழ்ச்சி
ஆனால், தற்போது உணவு தானிய உற்பத்தி அதிகரித்து, பணவீக்கம் அதிக வீழ்ச்சி கண்டுள்ளதால், சந்தையில் உணவு தானியங்களின் விலை சீரடைந்து, ஒரே அளவாக நீடிக்கிறது.
இதையடுத்து, பாரத் பிராண்டு தானிய விற்பனையை கைவிட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் என்ன?
2024 ஏப்ரலில், 8.70 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், 2025 ஏப்ரலில், 1.78 சதவீதமாக சரிவு
உரிய பருவமழை எதிர்பார்ப்பால், கோதுமை, அரிசி, பருப்பு ரகங்களின் உற்பத்தி உயரும் எனக் கணிப்பு
உணவு தானியங்களின் விலை உயர்ந்தால், பாரத் பிராண்டு பெயரில் விற்பனையை மீண்டும் துவக்க அரசு திட்டம்