ஆயிரம் பாலம் கட்டப் போகிறோம்; அமைச்சரவையில் முடிவெடுத்தது பீகார் அரசு!
ஆயிரம் பாலம் கட்டப் போகிறோம்; அமைச்சரவையில் முடிவெடுத்தது பீகார் அரசு!
ADDED : செப் 11, 2024 06:54 AM

பாட்னா; பீகார் மாநிலத்தில் கிராம பகுதிகளில் 1,000 பாலங்கள் கட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து கூடுதல் தலைமைச் செயலாளர் சித்தார்த் நிருபர்களிடம் விளக்கி கூறினார்.
ஒப்புதல்
அவர் கூறியதாவது; 1,000 சிறு பாலங்கள் கட்டுவதற்கான ஒப்புதல் அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஊரக பணித்துறை சார்பில் 100 மீட்டர் நீளம் கொண்ட சிறு பாலங்கள் கிராமப்புறங்களில் முன்னுரிமை அடிப்படையில் கட்டப்படும்.
நட்சத்திர ஓட்டல்கள்
மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமப்புற குடியிருப்பு பகுதிகளில் சாலைகள் அமைக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, பாட்னாவில் 5 நட்சத்திர ஓட்டல்கள், பஸ் நிலையங்களில் 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்களை ஷாப்பிங் மால்களுடன் இணைந்து கட்டுவதற்கான ஒப்புதலையும் அமைச்சரவை வழங்கி உள்ளது.
சுற்றுலாத்துறை
ஓட்டல்களில் அறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தனியார்துறையை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கடும் விமர்சனம்
பீகாரில் அண்மையில் பெய்த கனமழைக்கு ஏராளமான பாலங்கள் இடிந்து விழுந்தது. பாலங்கள் இடிந்து விழாத நாளே இல்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்த நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் 1,000 சிறு பாலங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.