பீஹார் தேர்தல்; 6 தொகுதி கொடுத்தால் இண்டி கூட்டணிக்கு தயார்: சொல்கிறார் ஓவைசி
பீஹார் தேர்தல்; 6 தொகுதி கொடுத்தால் இண்டி கூட்டணிக்கு தயார்: சொல்கிறார் ஓவைசி
ADDED : செப் 24, 2025 06:32 PM

பாட்னா: 'பீஹார் தேர்தலில் இண்டி கூட்டணிக்கு தயார். ஆறு தொகுதிகள் ஒதுக்க வேண்டும்' என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க விருக்கிறது. இதற்காக, அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு, தேசிய அளவில் முக்கிய கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கும், மாநில அளவில் செயல்படும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளுக்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.
விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டு அடம் பிடிப்பதால், பா.ஜ.,வும், காங்கிரசும் திணறி வருகின்றன. தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில், இரண்டு கூட்டணிகளிலும் இழுபறி நீடிக்கிறது.
சட்டசபை தேர்தலில், 'இண்டி' கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி தன் பெயரை சூசகமாக அறிவித்தார். எனினும் இதை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், பீஹார் தேர்தல் குறித்து, அசாதுதீன் ஓவைசி கூறியதாவது: பீஹார் மாநில தலைவர் அக்தாருல் இமான், ஆஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மேலும் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக ஊடகங்கள் மூலம் நாங்கள் கூறியுள்ளோம்.
அக்தருல் இமான் எங்களுக்கு 6 ஆறு தொகுதிகள் வழங்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார். அவர்கள் இதைச் செய்யாவிட்டால், பாஜவை யார் வெற்றிபெறச் செய்ய விரும்புகிறார்கள் என்பதை பீஹார் மக்கள் பார்ப்பார்கள். எனவே, முடிவு பீஹார் மக்களுடையது. இவ்வாறு அவர் கூறினார்.