பீஹார் ஆளுங்கட்சி எம்.எல்.சி.,யின் ரூ.26 கோடி சொத்துக்கள் முடக்கம்
பீஹார் ஆளுங்கட்சி எம்.எல்.சி.,யின் ரூ.26 கோடி சொத்துக்கள் முடக்கம்
ADDED : பிப் 06, 2024 11:34 PM

பாட்னா : பீஹாரில் சட்டவிரோத மணல் குவாரி வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.சி.,யின் 26 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத்துறை நேற்று முடக்கியது.
அரசுக்கு நஷ்டம்
பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தளம் கட்சியில் எம்.எல்.சி., யாக இருப்பவர் ராதா சரண் சா.
இவர் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தி, அதன் வாயிலாக கோடி கணக்கான ரூபாய்அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை விசாரித்த பீஹார் போலீசார், ராதா சரண் சா மற்றும் அவர் தொடர்புடைய நிறுவனத்தார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.
இதன் அடிப்படையில் வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை, கடந்த ஆண்டு நவம்பரில் ராதா சரண் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தற்போது ராதா சரண், அவரது மகன் கன்னையா பிரசாத் மற்றும் இவர்களுக்கு உதவியாக செயல்பட்ட தனியார் நிறுவனத்தின் இயக்குனர்கள் மூவர் என, அனைவரும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஹவாலா
அமலாக்கத்துறை விசாரணையில், சட்ட விரோத மணல் விற்பனையால் பீஹார் அரசுக்கு, 161 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
இதனால் பயனடைந்த ராதா சரண், அவரது மகன் கன்னையா பிரசாத் உதவியுடன் ஹவாலா குழுவை பயன்படுத்தி பணத்தை கைமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பணத்தை வைத்து ஹிமாச்சல பிரதேசம் மாநிலம், மணாலியில் உள்ள ஒரு ரிசார்ட்டை கையகப்படுத்தி உள்ளனர்.
மேலும், உத்தர பிரதேசத்தின் காசியாபாதில் தன் குடும்ப அறக்கட்டளையின் கீழ் உள்ள பள்ளிக்கு கட்டடங்களை கட்டிஉள்ளார்.
இந்நிலையில், ராதா சரண் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான, 26 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது.

