ADDED : ஏப் 03, 2025 07:33 AM
பெங்களூரு : கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 'ஊபர், ஓலா, ராபிடோ' போன்ற நிறுவனங்கள், பைக் டாக்சி சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
பைக் டாக்சி சேவைகளை இயக்குவதற்கான கொள்கையை வகுக்க, கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக் கோரி, அம்மாநில உயர் நீதிமன்றத்தில், சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம்.ஷியாம் பிரசாத் உத்தரவிட்டதாவது:
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், மாநில அரசு முறையான வழிகாட்டுதல்களை அறிவிக்கும் வரை பைக் டாக்சிகள் இயங்க முடியாது. அதனால், அடுத்த ஆறு வாரங்களுக்குள், கர்நாடகாவில், பைக் டாக்சி சேவைகளை நிறுத்த வேண்டும். இதை மாநில அரசு கண்காணிக்க வேண்டும். அதே சமயம், இந்த விவகாரத்தில் மாநில அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து பைக் டாக்சி நிறுவனங்கள் மேல் முறையீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

