பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகள் விடுதலை செல்லாது; உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகள் விடுதலை செல்லாது; உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ADDED : ஜன 08, 2024 11:23 AM

புதுடில்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனையை குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற பெண், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரும் இதில் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, 11 பேர், சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில், குஜராத் அரசு இவர்களை கடந்தாண்டு சுதந்திர தினத்தின் போது, முன் கூட்டியே விடுதலை செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு குஜராத் மாநில அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி இருந்தது.
அப்போது, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், 14 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின், எந்த அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று(ஜன.,08) தீர்ப்பு அளித்தனர்.
விடுதலை ரத்து
அப்போது நீதிபதிகள், பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என தீர்ப்பு அளித்தனர்.
அதிகாரம் இல்லை
மேலும் நீதிபதிகள் கூறியிருப்பதாவது: வழக்கு மஹாராஷ்டிராவில் நடைபெற்றதால் 11பேரை விடுவிப்பது குறித்து மஹாராஷ்டிரா அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் என்பது மிகவும் முக்கியம். பெண்களின் மரியாதை மிகவும் முக்கியம். பெண்கள் மரியாதைக்குரியவர்கள். தண்டனையை குறைக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை.இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.