ADDED : டிச 07, 2024 11:29 PM

-புதுடில்லி : கோவிலா, மசூதியா என்ற சர்ச்சைகளை தடுக்கும் வகையில், 1991ல் கொண்டு வரப்பட்ட வழிபாட்டு தலங்கள் சிறப்பு பிரிவுகள் சட்டம் செல்லுமா என்பது குறித்து, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய தனி அமர்வு, வரும் 12ம் தேதி விசாரிக்க உள்ளது.
கடந்த 1990களின் துவக்கத்தில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்னை தீவிரமாக இருந்தது. ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது, பாபர் மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன.
ரத யாத்திரை
ராமர் கோவில் கட்டக் கோரி, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி நாடு முழுதும் ரத யாத்திரை மேற்கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது, பிரதமராக இருந்த காங்கிரசின் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு, வழிபாட்டு தலங்கள் சிறப்புப் பிரிவுகள் சட்டத்தை அமல்படுத்தியது.
இதன்படி, 1947, ஆக., 15ல் நாடு சுதந்திரம் பெற்றபோது இருந்த எந்த ஒரு வழிபாட்டு தலத்திலும் மாற்றங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டது.
மேலும், அதன் மீது மற்றொரு சமூகத்தினர் உரிமை கோரவும் தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்துக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, உத்தர பிரதேசத்தின் வாரணாசி ஞானவாபி வளாகம், மதுரா கிருஷ்ணர் கோவில் - ஷாஹி இக்தா மசூதி விவகாரம், சம்பலில் ஷாஹி ஜமா மசூதி ஆகியவை தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
5 நீதிபதி அமர்வு
முகலாயர்கள் ஆட்சி யின்போது மற்றும் படையெடுப்பின்போது அங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு, இந்த மசூதிகள் கட்டப்பட்டதாக வழக்கு கள் தொடரப்பட்டன. இவை குறித்து விசாரிக்க நீதிமன்றங்களும் உத்தரவிட்டுள்ளன.
கடந்த 1991 சட்டத்தின்படி, இந்த வழக்குகள் செல்லாது என, முஸ்லிம்கள் தரப்பில் கூறப்பட்டுஉள்ளது.
மேலும், ராமர் கோவில் வழக்கில் உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வும், 1991 சட்டத்தை மேற்கோள் காட்டியுள்ளது. அதனால், 1991 சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்பதும் முஸ்லிம்கள் தரப்பு வாதமாகும்.
ஆறு வழக்கு
இதற்கிடையே, 1991ல் அறிமுகம் செய்யப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்ரமணியன் சுவாமி, இந்த சட்டத்தின் சில பிரிவுகளின் விளக்கங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதே நேரத்தில் அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உள்ளிட்டோர், இந்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்க கோரியுள்ளனர்.
மனுக்களில் கூறப்பட்டு உள்ளதாவது:
நீதி பெறுவது என்பது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை. அந்த உரிமையை வழிபாட்டு தலங்கள் சட்டம் பறிப்பதால், இச்சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
அடிப்படைவாதிகள், படையெடுப்பாளர்கள், சட்டத்தை மதிக்காதவர்களால் முன்பு இருந்த வழிபாட்டு தலத்தின் கட்டமைப்பு மாற்றப்பட்டு உள்ளது.
அதனால், 1947 ஆக., 15 என்று தேதி நிர்ணயித்து, 1991ல் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
பதிலளிக்க உத்தரவு
ஹிந்து, ஜெயின், புத்த மதத்தினர், சீக்கியர்கள் உரிமையை இச்சட்டம் பறித்துள்ளதால், சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறப்பட்டுள்ளன.
கடந்த 2022, மார்ச் 12ல் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் வரும், 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் தனி அமர்வு இதை விசாரிக்க உள்ளது.