ADDED : மார் 16, 2024 06:25 AM

தேசிய ஜனநாயக கூட்டணியில் கோலார் தொகுதி ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டதாக, அக்கட்சியின் தலைவர் குமாரசாமி கூறியதில் இருந்து, பா.ஜ.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்.
'கோலார் தொகுதியை பா.ஜ.,வுக்கு வழங்கிவிட்டு, சிக்கபல்லாபூரை ம.ஜ.த., பெறலாமே' என, அக்கட்சி தலைவர்களுடன் கோலார் பா.ஜ., - எம்.பி., ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவரின் ஆலோசனை எடுபடவில்லை.
மற்றொரு புறம், சிக்கபல்லாபூர் தொகுதியை பா.ஜ., - எம்.பி., முனிசாமி 'சீட்' கேட்கலாமே என்று சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர். 'சிக்கபல்லாபூரில் ஏற்கனவே பா.ஜ.,வில் சிலர் சீட் கேட்டு வருவதால், எந்த பயனும் இல்லை' என, முனிசாமி கூறி உள்ளார்.
பல கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டதால், தன் முயற்சி பலன் அளிக்காது என்பதை உணர்ந்த முனிசாமி, “மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியில் அமர வேண்டும். அதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும், அவரை வெற்றிப் பெற வைப்பது, எங்களின் கடமை,” என, உறுதியாக கூறிவிட்டார்.
இதனிடையில் அவரையும், சிலர் உசுப்பேத்தி, கட்சிக்கு விரோதமாக செயல்பட வைக்க முயன்றனர். ஆனால், “கட்சி மேலிட உத்தரவுக்கு பணிவது தான் சரி,” என, அவர் தெரிவித்துவிட்டார். கூட்டணி தர்மம் ஜெயிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட பா.ஜ., மற்றும், ம.ஜ.த.,வினரை ஒருங்கிணைக்கும் வேலையில் அவர் இறங்கி உள்ளார்
.- நமது நிருபர் -

