பண்டிப்பூர் இரவு போக்குவரத்து அமைச்சருக்கு பா.ஜ., கண்டனம்
பண்டிப்பூர் இரவு போக்குவரத்து அமைச்சருக்கு பா.ஜ., கண்டனம்
ADDED : ஜன 10, 2025 07:13 AM
பெங்களூரு: பண்டிப்பூர் வனப்பகுதியில் இரவு நேரத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளித்த, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவுக்கு, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா - கேரளாவை இணைக்கும் பண்டிப்பூர் வனப்பகுதியில், இரவு 9:00 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், நேற்று முன்தினம் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, 'பண்டிப்பூர் வனப்பகுதி வழியாக கேரளாவுக்கு செல்ல, இரவு 9:00 மணிக்கு மேல் இரண்டு பஸ்கள், ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது' என்று அறிவித்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, மாநில பா.ஜ., 'எக்ஸ்' வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
நீங்கள் கர்நாடக வனத்துறை அமைச்சரா அல்லது கேரள வனத்துறை அமைச்சரா. பண்டிப்பூரில் உள்ள வன விலங்குகளை பாதுகாக்க வேண்டியது, வனத்துறை அமைச்சரின் பணி.
அதை விடுத்து, கேரளாவுக்கு சாதகமாக வளைந்து கொடுத்து, இரவு நேரத்தில் வனப்பகுதியை வேடிக்கை பார்க்க, காங்கிரஸ் தலைவர்களுக்கு அனுமதி அளிக்கிறீர்களா. இந்த அனுமதியால், விலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தி உள்ளீர்கள்.
இதற்கு முன் வயநாடு எம்.பி.,யாக இருந்த ராகுலுக்கு பணிந்து, கன்னடர்களின் வரிப்பணத்தை கொடுத்தீர்கள்.
இப்போது அவரது சகோதரி பிரியங்காவை மகிழ்விப்பதற்காக, பண்டிப்பூரில் இரவு போக்குவரத்தை அனுமதித்துள்ளீர்கள்.
கர்நாடக வனத்தை காக்க இருக்கிறீர்களா அல்லது விலங்குகள் அழிவதற்கு ஆதரவாக நிற்கிறீர்களா.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.