பா.ஜ., காங்கிரஸ் வருவாய் கடந்த நிதியாண்டில் உயர்வு
பா.ஜ., காங்கிரஸ் வருவாய் கடந்த நிதியாண்டில் உயர்வு
ADDED : ஜன 28, 2025 10:59 PM

புதுடில்லி : கடந்த 2023 - 2024 நிதியாண்டில், பா.ஜ.,வின் வருவாய் 83 சதவீதம் உயர்ந்தது. காங்கிரசின் வருவாய், 170 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், தங்களுடைய தணிக்கை செய்யப்பட்ட ஆண்டு வரவு - செலவு கணக்கை தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்க வேண்டும்.இதன்படி, 2023 - 2024ம் ஆண்டுக்கான வரவு செலவு கணக்கை, பா.ஜ., மற்றும் காங்., தாக்கல் செய்துள்ளன.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
பா.ஜ.,வின் ஆண்டு வருவாய் 83 சதவீதம் உயர்ந்து, 4,340.5 கோடி ரூபாயாக அதிகரித்தது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக மட்டும், 1,685 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டில் அதன் வருவாய், 2,360 கோடி ரூபாயாக இருந்தது.காங்கிரசின் வருவாய், 452 கோடி ரூபாயில் இருந்து, 1,225 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, 170 சதவீத உயர்வாகும்.அதுபோல, தேர்தல் பத்திரங்கள் வாயிலான வருவாய், 171 கோடி ரூபாயில் இருந்து, 828.4 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 384 சதவீதஉயர்வாகும்.பா.ஜ.,வின் செலவு 62 சதவீதமாகவும், காங்கிரசின் செலவு 120 சதவீதமாகவும் உயர்ந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.