ADDED : பிப் 21, 2024 01:35 AM

பீதர் : ''பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.,வும் ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்தி வருகின்றனர்,'' என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
பீதரில் நேற்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அவர் பேசியதாவது:
நாட்டில் ஜனநாயகம் நிலைபெற வேண்டுமானால், காங்கிரசை ஆதரிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.,வும் ஜனநாயக அமைப்புகளை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
செய்தி ஊடக நிருபர்கள், காங்கிரசுக்கு சாதகமாக செய்தி வெளியிட்டால், அதை கொடுத்த நிருபர் பணி இழக்க நேரிடும். பசவண்ணரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், அனைத்து சேனல்களும் மோடியின் பா.ஜ., நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்புகின்றன. ஊடக நிருபர்கள் மீது எந்த தவறும் இல்லை. பெரும்பாலான சேனல்கள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே பேசியதாவது:
கல்யாண கர்நாடகாவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்க பல தலைவர்கள் போராடினர். பா.ஜ., ஆட்சியில் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்டபோது, நிராகரிக்கப்பட்டது.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் கார்கே, சோனியா, ஆகியோரால் சிறப்பு அந்தஸ்து கிடைத்தது. இவை அனைத்துக்கும் மல்லிகார்ஜுன கார்கேயின் பங்களிப்பு தான் காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.

