கேரள அரசு பொய் சொல்கிறது பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு
கேரள அரசு பொய் சொல்கிறது பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 06, 2025 12:23 AM

திருவனந்தபுரம்: ''வெளிநாட்டு நிதியுதவியை பெற அனுமதி மறுக்கப்பட்டதாக கேரள அரசு பொய் சொல்கிறது,'' என, அம்மாநில பா.ஜ., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜிவ் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார்.
முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிராவுக்கு, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நிதியுதவி பெற, மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மார்க். கம்யூ., கட்சியைச் சேர்ந்த கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால், 'இயற்கை பேரிடர்களால் கேரளா பாதிக்கப்பட்ட போதும்கூட, வெளிநாட்டு நிதியுதவியை பெற மத்திய அரசு அனுமதி மறுத்தது. ஆனால் தற்போது, மஹாராஷ்டிராவுக்கு அனுமதி வழங்கி உள்ளது. மாநிலங்களிடையே மத்திய அரசு பாகுபாடு காட்டுகிறது' என, குற்றஞ்சாட்டினார்.
இதுகுறித்து, கேரள பா.ஜ., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது:
வெளிநாட்டு நிதியுதவி விவகாரத்தில், கேரள அரசு தவறான தகவல்களை பரப்பி வருவதாக, ஏற்கனவே ஆதாரங்களுடன், மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தெரிவித்து விட்டார். இருந்தும், கேரள அரசு தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
கொள்கை முடிவில் மாற்றம் ஏற்பட்டதால் தான், வெளிநாட்டு நிதியுதவி பெற மஹாராஷ்டிராவுக்கு அனுமதி கிடைத்தது. தற்போது விண்ணப்பித்தால், கேரளாவுக்கும் அனுமதி கிடைக்கும். உண்மையை புரிந்துகொள்ளாமல், அரசியலுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.