சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த பா.ஜ.,வினரால் சர்ச்சை! அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம்
சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த பா.ஜ.,வினரால் சர்ச்சை! அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம்
ADDED : ஏப் 21, 2025 04:55 AM

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் பா.ஜ., -- எம்.பி., நிஷிகாந்த் துபே கடுமையாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், துபேக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளிக்காதது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தமிழக அரசின், 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
மேலும், சட்டசபை அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதிர்வலை
மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஜனாதிபதிக்கே காலக்கெடு விதித்ததால், இந்த உத்தரவு, அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், 'சூப்பர் பார்லிமென்டாக செயல்படுவதா' என உச்ச நீதிமன்றத்தை கேள்வி எழுப்பியதுடன், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்த விவகாரத்தையும் சுட்டிக் காட்டினார். அவருக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, பா.ஜ., -- எம்.பி., நிஷிகாந்த் துபே, 'உச்ச நீதிமன்றமே சட்டங்களை இயற்றினால், சட்டசபைகளையும் பார்லிமென்டையும் மூடி விடலாம். நம் நாட்டில் மத சண்டைகளை உச்ச நீதிமன்றம் துாண்டுகிறது.
'உச்ச நீதிமன்றம் தன்னுடைய எல்லையை மீறுகிறது. நாட்டின் அனைத்து உள்நாட்டு மோதல்களுக்கும் தலைமை நீதிபதியே பொறுப்பு' என கடுமையாக விமர்சித்தார். வக்ப் வாரிய திருத்த சட்டம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் துவங்கிய நிலையில், இந்த கருத்துகளை கூறினார்.
ஆபத்தானவை
இதுபோல, மற்றொரு பா.ஜ., -- எம்.பி.,யும், உ.பி., முன்னாள் துணை முதல்வருமான தினேஷ் சர்மா, 'பார்லிமென்டுக்கும், ஜனாதிபதிக்கும் யாரும் வழிகாட்டத் தேவையில்லை' என்றார்.
இந்நிலையில், நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனாஸ் தன்வீர் தெரிவித்துள்ளார். இதற்கு அனுமதி அளிக்கும்படி அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், 'உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக, மிகவும் மலிவான கருத்துகளை நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார். அவரது கருத்துகளை மிகவும் ஆபத்தானவை; ஆத்திரமூட்டுபவை. எனவே, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
நிராகரிப்பு
இதற்கிடையே, 'உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி குறித்து பா.ஜ., - -எம்.பி.,க்கள் கூறிய கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அவர்களின் சொந்த கருத்து; பா.ஜ., அவற்றை நிராகரிக்கிறது. நீதித்துறையையும், நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் பா.ஜ., மதிக்கிறது.
'அவர்கள் இருவருக்கும் மட்டுமல்ல கட்சியின் மற்ற அனைவருக்குமே இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளேன்' என பா.ஜ., தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.