ADDED : டிச 10, 2024 07:11 AM
பெலகாவி: கர்நாடக சட்டசபை கூட்டம் நேற்று துவங்கிய சிறிது நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் எத்னால் பேசுகையில், ''மாநிலத்தில் 21,000க்கும் மேற்பட்ட சொத்துகள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
''பீதர் அனுபவ மண்டபமும் கூட, வக்பு வாரிய சொத்து என்று கூறுகின்றனர். ஏழை விவசாயிகளுக்கு வக்பு வாரியம் நோட்டீஸ் கொடுத்து உள்ளது. இது குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும்,'' என்று கேட்டு கொண்டார்.
அப்போது மருத்துவ கல்வி அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீல், ''பசவண்ணரை அவமதித்தவர் பசனகவுடா பாட்டீல் எத்னால். அவர் அனுபவ மண்டபம் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள்,'' என்று ஆக்ரோஷமாக கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எத்னால் உட்பட ஒரு சில உறுப்பினர்கள் மட்டும், சபாநாயகர் இருக்கைக்கு முன்பு நின்று போராட்டம் நடத்தினர். பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களது இருக்கையை விட்டு எழுந்து வரவில்லை.
'உங்களுக்குள் ஒற்றுமையே இல்லை' என்று, காங்கிரஸ் அமைச்சர்கள், பா.ஜ., உறுப்பினர்களை பார்த்து கிண்டல் செய்தனர்.
அப்போது கோபமடைந்த எதிர்க்கட்சி தலைவர் அசோக், உறுப்பினர் சுனில் குமார் ஆகியோர், 'வக்பு பிரச்னை பீதரிலிருந்து சாம்ராஜ்நகர் வரை பரவியுள்ளது. இது பற்றி விவாதிக்க முதலில் அனுமதி தர வேண்டும்' என்று கூறினர்.
இது குறித்து விவாதிக்க அனுமதி தருவதாக சபாநாயகர் கூறியதால், பா.ஜ., உறுப்பினர்கள் தங்கள் இருக்கைக்கு சென்றனர்.