ஓட்டுப்பதிவை முழுமையாக வீடியோ பதிவு செய்ய பா.ஜ., கோரிக்கை
ஓட்டுப்பதிவை முழுமையாக வீடியோ பதிவு செய்ய பா.ஜ., கோரிக்கை
ADDED : பிப் 29, 2024 12:55 AM

புதுடில்லி: 'வரும் லோக்சபா தேர்தலின் போது அனைத்து ஓட்டுப்பதிவு மையங்களிலும் ஓட்டுப்போடும் நடைமுறையை முழுமையாக வீடியோவாக பதிவு செய்யவேண்டும்' என்று' தேர்தல் கமிஷனுக்கு பா.ஜ., கோரிக்கை விடுத்து உள்ளது.
சீர்திருத்தம்
லோக்சபா தேர்தல விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுதும் 12 லட்சம் ஓட்டுப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் பா.ஜ., தேசிய பொதுச் செயலர் அருண் சிங் அடங்கிய பா.ஜ., குழு நேற்று மத்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டி:
கட்சிகள் ஊடகங்களில் பிரசாரம் செய்வதற்கு போதுமான நேரத்தை ஒதுக்குவது தொடர்பாக சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
நடவடிக்கை
தேர்தலின்போது வீடுகளில் கட்சிக் கொடிகள் பறக்கவிடுவது, சுவர் ஓவியங்கள் வரைவது தொடர்பான தெளிவான விதிகளை தேர்தல் கமிஷன் வகுக்க வேண்டும்.
தேர்தல் நடைமுறை வெளிப்படைத் தன்மையாக இருப்பதற்கும், அதிக வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கான நடவடிக்கையையும் பா.ஜ., மேற்கொண்டு உள்ளது. இதற்காக நகர்ப்புறங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டுப்பதிவு மையங்கள் அமைப்பதன் வாயிலாக அதிகப்படியான வாக்காளர்கள் ஓட்டு போடுவர்.
தேர்தலின் போது அனைத்து ஓட்டுப்பதிவு மையங்களிலும் ஓட்டு போடும் நடைமுறையை, 50 சதவீதம் அளவுக்கு வீடியோவாக பதிவு செய்வதை, 100 சதவீதம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

